தமிழ்புதல்வன் திட்டம்.. ஆகஸ்ட் 9ம் தேதி கோவையில் தொடக்கம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Meenakshi
Jul 31, 2024,07:55 PM IST

சென்னை:   கல்லூரியில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்புதல்வன் திட்டம் ஆகஸ்ட் 9ம் தேதி கோவையில் தொடங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொகுதியான சென்னை கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த  விழாவில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், கொளத்தூர் தொகுதிக்கு வந்தாலே ஒரு புது எனர்ஜி வந்துவிடுகிறது. கொளத்தூர் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளும் என்னுடைய தொகுதி தான். கல்வி தான் யாரும் திருட முடியாத சொத்து. இதை தான் நான் மாணவர்களிடம் சொல்லிக்கொண்டு இருக்கின்றேன். படிப்பு படிப்பு படிப்பு. இது தான் முக்கியமானது.




புதுமைப் பெண்  திட்டத்தை போன்ற தமிழ் புதல்வன் திட்டம் வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி கோவையில் தொடங்கி வைக்கப்போகிறேன். அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில கல்லூரிக்குச் செல்லும் போது புதுமைப்பெண் திட்டம் மூலம் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணம் மாணவிகளின் கல்வி உபகரணங்கள் வாங்குவதற்கும் போக்குவரத்து உள்ளிட்டவருக்கு பெற்றோரை எதிர்பார்க்காமல் செலவிட முடிகிறது. புதுமைப்பெண் திட்டம் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.


மாணவிகளுக்கு மட்டும் தானா... மாணவர்களுக்கும் இந்த உதவி தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் கடந்த பட்ஜெட்டில் உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கும் உதவி தொகை வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஆறு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்கள் உயர்கல்விக்கு செல்லும் போது மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை ஆகஸ்ட் 9ம் தேதி கோவையில் நான் தான் தொடங்கி வைக்கப்போகிறேன்.


படிப்போடு சேர்த்து பல திறமைகளை மாணவர்கள் வளர்த்து கொள்ள தான் நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தை பயன்படுத்தி பேச்சுச் திறமை, எழுத்து திறமையை மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும். மாணவர்களின் ஒபிசிட்டிக்கு இன்று முக்கிய காரணமாக இருப்பது பாஸ்புட்டு தான். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். மாணவர்கள் உடல்நலனில் அக்கரையுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.