தொடங்கியது கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்.. கோலமிட்டு கொண்டாடிய பெண்கள்!

Su.tha Arivalagan
Sep 15, 2023,10:37 AM IST
காஞ்சிபுரம்: கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் பெண்கள் கோலம் போட்டும், இனிப்புகள் வழங்கியும் இதைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.



சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக 1.06 கோடி பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கிராம் முதல் நகரம் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட 1.06 கோடி பயனாளர்களின் வங்கிக் கணக்கில் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 1000 நேற்றிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. 1.06 கோடி  பயனாளர்களுக்கும் ஒரே நாளில் பணத்தை வழங்க முடியாது என்ற காரணத்தால் நேற்று முதல் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.



பெண்கள் உற்சாகம் - வரவேற்பு

இத்திட்டத்தை பட்டி தொட்டி முதல் நகரங்கள் வரை என அனைத்து பகுதிகளிலும் முழுமையாக கொண்டு சேர்க்க திமுக நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டியும்,  வேன் பிரச்சாரங்கள் மூலமும்  பிரபலப்படுத்தி வருகின்றனர்.



பெண்களும் கூட வீடுகளுக்கு முன்பு முதல்வருக்கு நன்றி தெரிவித்து கோலம் போட்டு வரவேற்பும், நன்றியும் தெரிவித்துள்ளனர். 



வழக்கமாக பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளின்போதுதான் இதுபோல வித்தியாசமான கோலங்களை வீடுகள் முன்பு பார்க்கலாம். ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்தபோது இப்படித்தான் வீடுகள் தோறும் மாணவர்களை வாழ்த்தியும்,  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும் மக்கள் கோலம் போட்டனர். அந்த வகையில், அரசின் சாதனை திட்டமான மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை பாரம்பரிய பொங்கல் திருவிழா  போன்று திமுக நிர்வாகிகள், பெண்கள் கொண்டாடி தங்களின் மகிழ்ச்சிகளை தெரிவித்து வருகின்றனர்.