இதென்ன பிரமாதம்.. இந்த வாரம் சில இடங்களில் ரெட் அலர்ட் வந்தாலும் வரலாம்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!

Su.tha Arivalagan
May 16, 2024,09:08 AM IST

சென்னை: தமிழநாடு முழுவதும் நல்ல மழை பெய்து வருவது அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இந்த வாரத்தில் சில இடங்களில் ரெட் அலர்ட் கொடுக்கும் அளவுக்கு மிக மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.


தென் மேற்குப் பருவ மழை மே 31ம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கோடை மழை களை கட்டியுள்ளது. இதுவரை ஆங்காங்கே நனைத்துச் சென்ற கோடை மழையானது தற்போது தலைநகர் சென்னை தொடங்கி குமரி வரை பெரும்பாலான பகுதிகளில் சூப்பராக  பெய்ய ஆரம்பித்துள்ளது.




குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளிலும், உள் மாவட்டங்களிலும் செமத்தியான மழை பெய்து வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். மே மாதத்தில் UAC அதாவது மேலடுக்கு  வளிமண்டல சுழற்சி உருவாவது அரிதானது. அது தற்போது உருவாகியுள்ளதால்தான் இந்த மழை நமக்குக் கிடைத்துள்ளது. இது இப்போதுதான் தொடங்கியுள்ளது என்றும் இன்னும் நிறைய மழை இருக்கிறது என்றும் கொட்டும் மழையில் தேனைக் கலந்து காதில் ஊற்றியுள்ளார் வெதர்மேன் பிரதீப் ஜான்.




ஒரு வாரத்தில் சில இடங்களில் ரெட் அலர்ட் கொடுக்கும் அளவுக்கு மிக மிக கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் வெதர்மேன் எச்சரித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று சூப்பரான மழை பெய்யும் என்றும் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.


சென்னையில் அலுவலகம் செல்வோர் காலையிலேயே மழை பெய்து வருவதால் குடையுடனும், ரெயின் கோட்டுடனும் செல்வதைக் காண முடிந்தது. மழை பெய்து வருவதால் டூவீலரில் செல்லும் பலர் அதற்கு விடை கொடுத்து விட்டு பஸ் ஆட்டோ, ரயில், மெட்ரோ என மாறியிருப்பதால் அவற்றில் கூட்டமும் காணப்படுகிறது.


பிறகென்னப்பா.. சூடான வடையும்.. சூப்பரான கவிதை நடையுமாக.. மழையை அனுபவிக்க தயாராகுங்க!