சென்னைக்கு மறுபடியும் எப்ப மழை.. இன்று யாருக்கெல்லாம் குடை தேவைப்படும்.. வெதர்மேன் சொல்வது என்ன?

Su.tha Arivalagan
Oct 20, 2024,09:56 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று உட்புற மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். அதேபோல தென் மாவட்டங்கள் சிலவற்றிலும் மழை இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.


தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கி விட்டது. ஆரம்பமே அசத்தலா இருக்கே என்று கவுண்டமணி சொல்வது போல முதல் நாளிலேயே முத்திரை பதித்து விட்டது இந்த வருடத்து மழை. சூப்பரான முதல் ஸ்பெல்லை முடித்து விட்டு தமிழ்நாட்டில் பரவலாக மழை தொடர்ந்து வருகிறது.


இந்த நிலையில் இன்றைய மழைப் பொழிவு நிலவரம் குறித்து பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.




சென்னைக்கு எப்போது?


சென்னையைப் பொறுத்தவரை இரவு முதல் காலை வரையிலான மழை தொடரும். பரவலாக இது பெய்து வரும். சென்னையில் அக்டோபர் மாதத்து மழை இதுவரை 350 மில்லி மீட்டரைத் தாண்டி விட்டது. தமிழ்நாட்டின் அக்டோபர் மாத மழைக் கணக்கு 150 மில்லி மீட்டராக இதுவரை பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 70 சதவீதம் கூடுதலாகும்.


அடுத்த பத்து நாட்களுக்கு தமிழ்நாட்டின் மேற்குப் பகுதி, டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும். பெங்களூரிலும் நல்ல மழை தொடரும்.


எங்கெல்லாம் மழை?


இன்றும் நாளையும் கீழ்க்கண்ட மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது - சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பத்தூர், டெல்டா மாவட்டங்கள், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, மதுரை, சிவகங்கை, கொடைக்கானல், திருவண்ணாமலை, விருதுநகர், திண்டுக்கல், விழுப்புரம், கடலூர், வேலூர்.


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு - இரவு முதல் காலை வரையிலான மழை தொடர்ந்து நீடிக்கும். ஜாலியா அனுபவிக்கிற மாதிரி இது இருக்கும்.


பிறகு ஒரு முக்கியமான விஷயம்.. அக்டோபர் 24-25 வாக்குல உருவாகப் போகும் புயலானது, தமிழ்நாட்டைப் பாதிக்காது. மாறாக அது ஒடிஷா பகுதியை நோக்கி செல்லும் என்று கூறியுள்ளார் வெதர்மேன்.


அப்புறம் என்னப்பா.. இந்த மழையும் நமக்கு பிரச்சினை இல்லை.. அடுத்த பெரிய மழை வரைக்கும்.. இப்ப பெய்யப் போற மழையை என்ஜாய் பண்ணுவோம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்