திமிறும் காளைகள்.. தச்சங்குறிச்சியில் தொடங்கி.. அடுத்தடுத்து  களை கட்டப் போகும் ஜல்லிக்கட்டு!

Su.tha Arivalagan
Jan 09, 2023,10:13 AM IST
சென்னை: தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டு சீசன் தொடங்கி விட்டது. இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு என்ற பெருமையை புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு பெற்றுள்ளது.



தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.  நிறையப் பேருக்கு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மட்டுமே அதிகம் தெரியும். ஆனால் அதையும் தாண்டி மேலும் பல ஊர்களிலும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதுதவிர எருது விடும் விழா உள்ளிட்டவையும் நடைபெறும்.

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட காளைகள் இதில் கலந்து கொண்டு சீறிப் பாய்ந்தன. பாய்ந்து வந்த காளைகளை புலிகள் போல எதிர்கொண்டு அடக்கிய இளைஞர்களுக்குப் பரிசுகள் வாரி வழங்கப்பட்டன.

முன்னதாக ஜல்லிக்கட்டுக்கான அனைத்து ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. அனைத்து விதிமுறைகளும் முறையாக கடைப்பிடிக்கப்பட்டன. மாநில அமைச்சர்கள் சி.வி.மெய்யநாதன், எஸ். ரகுபதி உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இனி அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு , எருது விடும் நிகழ்ச்சி, ரேக்ளா ரேஸ் என தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா களை கட்டும். ஜனவரி 15ம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும். 16ம் தேதி பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும். 17ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும்.

சென்னையிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தேதியும் அறிவிக்கப்படவில்லை.