சட்டசபையின் கண்ணியத்தை சீர்குலைத்து விட்டார் சபாநாயகர்.. ஆளுநர் மாளிகை அறிக்கை

Su.tha Arivalagan
Feb 12, 2024,06:21 PM IST

சென்னை:  ஆளுநரை கடுமையாக விமர்சித்துப் பேசியதன் மூலம் தனது பதவியின் மாண்பையும், சட்டசபையின் கண்ணியத்தையும், சபாநாயகர் அப்பாவு சீர்குலைத்து விட்டார் என்று தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.


சட்டசபையில் இன்று காலை நடந்த சம்பவங்கள் தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:




1. ஆளுநர் உரையின் வரைவு நகல், தமிழ்நாடு அரசிடமிருந்து பிப்ரவரி 9ம் தேதி ராஜ்பவனுக்கு அனுப்பி  வைக்கப்பட்டது. அதில் உண்மைக்குப் புறம்பான பல பகுதிகள் இடம் பெற்றிருந்தன.


2. மாண்புமிகு ஆளுநர் அந்த வரைவு நகலை கீழ்க்கண்ட அறிவுரையுடன் திருப்பி அனுப்பினார்.


- தேசிய கீதத்தை ஆளுநர் உரைக்கு முன்பும், ஆளுநர் உரைக்குப் பின்பும் இசைக்க வேண்டும்.  இதுதொடர்பாக கடந்த காலத்தில் முதல்வருக்கும், சபாநாயகருக்கும் ஆளுநர் கடிதம் அனுப்பியுள்ளார்.


- அரசின் சாதனைகள், கொள்கைகள், திட்டங்கள் ஆகியவற்றை ஆளுநர் உரை பிரதிபலிக்க வேண்டும். மாறாக திசை திருப்பும் தகவல்களுடன், பிரிவினைவாத அரசியல் பார்வையுடன் கூடிய வெற்றுவார்த்தைகளுடன் கூடியதாக அது இருக்கக் கூடாது.




3. ஆளுநரின் அறிவுரையை அரசு ஏற்க மறுத்து விட்டது.


4. இன்று காலை 10 மணிக்கு சட்டசபையில் ஆளுநர் உரை நிகழ்த்தியபோது, மாண்புமிகு சபாநாயகர்,  மாண்புமிகு முதல்வர், சபை உறுப்பினர்கள், தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம் கூறி, ஆளுநர் உரையில், திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் இடம் பெற்றிருந்த முதல் பத்தியை ஆளுநர் படித்தார். அதன் பிறகு மேற்கொண்டு உரையைப் படிக்க முடியாத அளவுக்கு அதில் திசை திருப்பும் தகவல்கள் இடம் பெற்றிருப்பதால் தொடர்ந்து படிக்கவில்லை என்று கூறி, தமிழ்நாட்டு மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் சட்டசபைக் கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமாக நடைபெற வேண்டும் என்று வாழ்த்தி உரையை நிறுத்தி விட்டு அமர்ந்தார்.


5. அதன்பிறகு மாண்புமிகு சபாநாயகர் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தைப் படித்தார். அந்தப் பேச்சு முடியும் வரை ஆளுநர் அவையில் அமர்ந்திருந்தார்


6. சபாநாயகர் தனது உரையை முடித்தபோது, திட்டமிட்டபடி தேசிய கீதம் இசைக்கப்படும் என்று கருதி, ஆளுநர் எழுந்து நின்றார்.  ஆனால் சபாநாயகர் தேசிய கீதத்தை திட்டமிட்டபடி இசைக்கச் செய்வதற்குப் பதில், ஆளுநருக்கு எதிராக பேச ஆரம்பித்தார். நாதுராம் கோட்சே உள்ளிட்டோரின் ஆதரவாளர் என்று ஆளுநரை விமர்சிக்க ஆரம்பித்தார். இந்த வழக்கத்திற்கு விரோதமான செயலால் சபாநாயகர், தனது பதவியின் மாண்பையும், அவையின் கண்ணியத்தையும் சீர்குலைத்து விட்டார்.


சபாநாயகர் தொடர்ந்து அவதூறாகப் பேசி வந்ததால், தனது பதவியின் கெளரவத்தையும், சபையின் கண்ணியத்தையும் காப்பதற்காக ஆளுநர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.