"ராமர் பெயரில் பூஜைக்கு தடை".. அமைச்சர் நிர்மலா சீதாராமன் புகார்.. பி.கே.சேகர்பாபு அதிரடி விளக்கம்!

Su.tha Arivalagan
Jan 21, 2024,05:18 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில்களில் ராமர் பெயரில் பூஜை நடத்தவோ, அன்னதானம் செய்யவோ, பிரசாதம் வழங்கவோ கூடாது என்று தடுக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு புகாரைக் கூறியுள்ளார். ஆனால் இது முற்றிலும் தவறான தகவல், பொய்யான செய்தியை அமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்திற்குரியது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.


அயோத்தியில் நாளை ராமர் கோவில் திறக்கப்படவுள்ளது. இதை பெரிய விழாவாக இந்து அமைப்புகள், பாஜகவினர் உள்ளிட்டோர் கொண்டாடி வருகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது. மதுக் கடைகளை மூடவும் உத்தரவிட்டுள்ளனர்.


தென் மாநிலங்களைப் பொறுத்தவரை எந்த மாநிலத்திலும் விடுமுறை அறிவிக்கப்படவில்லை. அதேசமயம், பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர். காங்கிரஸ் ஆளும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நாளை பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.




இந்த நிலையில் ஒரு நாளிதழில் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் நாளை சிறப்பு பூஜைக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளதாக செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை மேற்கோள் காட்டி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு டிவீட் போட்டிருந்தார்.


அதில், அயோத்தி ராமர் கோவில் விழா நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் 200க்கும் மேற்பட்ட ராமர் கோவில்கள் உள்ளன. இந்து அறநிலையத்துறை நிர்வகிக்கும் கோவில்களில் பூஜை, பஜனை, பிரசாதம், அன்னதானம் ஆகியவற்றை ராமர் பெயரில் வழங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட கோவில்களிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு காவல்துறை தடுத்து வருகிறது. இது போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோரை காவல்துறை மிரட்டுகிறது, அவர்களது பந்தல்களை பிரித்து போட்டுள்ளனர். இந்த, இந்து விரோத, வெறுப்பு நடவடிக்கையை கடுமையாக கண்டிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.


அமைச்சர் பி.கே.சேகர்பாபு விளக்கம்:





இதற்கு தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உடனடியாக பதில் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவீட்டில், சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டை திசை திருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பேரில் பூஜை செய்யவோ அன்னதானம் வழங்குவோ பிரசாதம் வழங்குவோ பக்தர்களுக்கு எந்த தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை.


முற்றிலும் உண்மைக்கு புறம்பான உள்நோக்கம் கொண்ட பொய் செய்தியை உயர்ந்த பதவியில் உள்ள மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் போன்ற ஒரு பரப்புவது வருத்தத்திற்குரியது என்று அவர் கூறியுள்ளார்.