ஆவின் பாலை கள்ள சந்தையில் விற்றால் ஏஜென்ட் லைசென்ஸ் ரத்து: அமைச்சர்  எச்சரிக்கை

Meenakshi
Dec 07, 2023,02:43 PM IST
சென்னை: மிச்சாங் புயல் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் பயன்படுத்தி ஆவின் பாலை கள்ள சந்தையில் விற்றால் முகவர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று  பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மிச்சாங் புயல் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களுக்கு அதிகபடியான பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளது. புயல் வந்த நாள் முதல் இன்று வரை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புயல் காரணமாக சென்னை, திருவள்ளுவர், செங்கல்பட்டு,காஞ்சிபுரம்  உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

பல பகுதிகளில் அத்தியாவசிய தேவைகளான உணவு, குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முக்கிய தேவையான பால் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.  தற்போது நிலைமை பரவாயில்லை. ஆனாலும் பல பகுதிகளில் கடைகளில் பாலை அதிக விலை வைத்து விற்பதாக புகார்கள் எழுந்துள்ளன.



தண்ணீர் தேங்கிய பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாததினால்  பால் கிடைக்கப்பெறாமல் பொது மக்கள் தவித்து வருகின்றனர். பால் ஒரு சில இடங்களில் மட்டும் கிடைப்பதினால் பொதுமக்கள்  நீண்ட வரிசையில் நின்று பால் பாக்கெட் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பால் விற்கும் முகவர்கள், தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தேவைக்கேற்றவாறு மொத்த விற்பனையாளர்களுக்கும் சில்லறை விற்பனையாளர்களுக்கும் பால் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் ஆவின் பாலை பொதுமக்களுக்கு வழங்காமல் கள்ளச் சந்தையில் விற்கவோ அதிக விலைக்கு விற்பனை செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு முகவர் உரிமமும் ரத்து செய்யப்படும் என்று மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.