"Never Ever".. நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர மாட்டேன்.. ஆளுநர் ரவி ஆவேசம்!

Su.tha Arivalagan
Aug 12, 2023,01:46 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசின் நீட் தேர்வு  விலக்கு மசோதாவுக்கு ஒருபோதும் ஒப்புதல் தர மாட்டேன் என்று ஆளுநர் ஆர். என். ரவி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Never Ever என்று அவர் உரத்த குரலில் கூறியதால் பரபரப்பு கூடியது.


தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை தமிழ்நாடு அரசு சட்டசபையில் இயற்றி அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. அந்த மசோதாவுக்கு விளக்கம் கேட்டு கடந்த ஜனவரி மாதம் அதை தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்தார் ஆளுநர். இருப்பினும் தமிழ்நாடு அரசு அந்த மசோதாவை மீண்டும் சட்டசபையில் இயற்றி ஆளுநருக்கே அனுப்பி வைத்தது. இந்த மசோதா தற்போது குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.




மசோதாவுக்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுடன் கலந்துரையாடினார் ஆளுநர் ஆர்.என். ரவி. அப்போது சேலத்தைச் சேர்ந்த ஒரு தந்தை எழுந்து, உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு தேர்வு மசோதாவில் எப்போது கையெழுத்து போடுவீர்கள் என்று கேட்டார்.


இந்தக் கேள்வியை எதிர்பார்க்காத ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டெ�� சுதாரித்துக் கொண்டு, நீட் விலக்கு தேர்வு மசோதாவில் நான் கையெழுத்து  போட மாட்டேன்.. Never Ever என்று கூறினார். தொடர்ந்து அந்தத் தந்தை ஏன் போட மாட்டீர்கள்.. நீட் தேர்வு இல்லாமலேயே எங்களது மாணவர்கள் சிறந்து விளங்கினார்கள். சிறந்த கல்வியை தமிழ்நாடு கொடுக்கிறது. மருத்துவக் கல்வியில் தமிழ்நாடு மாணவர்கள் சிறந்து விளங்கி வந்துள்ளனர் என்று பேசினார்.


அவரது கேள்விகளுக்கு தொடர்ந்து உரத்த குரலில் பதிலளித்தபடி இருந்தார் ஆளுநர். "நீட் தேர்வுகளுக்காக பயிற்சி மையங்களுக்குப் போக வேண்டியதில்லை. சிபிஎஸ்இ படிப்பை படித்தாலே, அதில் தேர்ச்சி பெற்றாலே வெல்லமுடியும். நீட் தேர்வை ரத்து செய்தால் மாணவர்களின் போட்டித் திறன் பாதிக்கப்படும். அதை நான் விரும்பவில்லை. எனக்கு இறுதி அதிகாரம் இருந்தால் நிச்சயம் நீட் எதிர்ப்பு மசோதாவை நான் அனுமதிக்க மாட்டேன் என்றார் ஆளுநர் ஆர். என். ரவி.


இருவருக்கும் இடையே கடும் விவாதம் நடந்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் அந்த தந்தையிடமிருந்து மைக் திரும்பப் பெறப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த உரையாடல் சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்டது. ஆளுநரின் இந்த பேச்சுக்கு திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேசமயம், பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.