பட்டா மாறுதல் உள்ளிட்ட 26 சான்றிதழ்கள்.. இனி ஈஸியா கிடைக்கும்.. அதுவும் 16 நாட்களில்!

Meenakshi
May 25, 2024,04:33 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் ஆன்லைன் வழியாக வழக்கப்படும் பட்டா உள்ளிட்ட 26 சான்றிதழ்களை 16 நாட்களுக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


முன்னர் எல்லாம் பட்டா, சிட்டா எதுவாக இருந்தாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று அலைந்து திரிந்து தான் வாங்க வேண்டியது இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக கிராமங்களில் இருந்து வருபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். அதுமட்டும் இன்றி ஒன்று, இரண்டு நாட்களிலும் வாங்க முடியாது. பல மாதங்கள் அலைந்து வாங்கும் நிலையும் இருந்தது.




இவற்றிற்கு எல்லாம் ஒரு தீர்வாக தான் ஆன்லைன் வழியில் புதிய செயலி கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த செயலியின் மூலம் தற்போது பட்டா, சிட்டா உள்ளிட்டவை பெறப்பட்டு வருகின்றன. இவ்வாறு பெறப்படும் ஆவணங்கள் பல நாட்களுக்கு பின்னர் தான் கைக்கு கிடைக்கின்றன. இதையும் எளிதாக்கி, அவற்றை விரைவில் பெறுவதற்கான நடவடிக்கையை தற்போது தமிழக அரசு எடுத்து வருகிறது.


இதன்படி, ஆன்லைன் வழியாக வழங்கப்படும் பட்டா மாறுதல் உள்ளிட்ட 26 சான்றிதழ்களை 16 நாட்களுக்குள் கைக்கு கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த நடைமுறையை விரைவுபடுத்தி கண்காணிக்க, ஒவ்வொரு தாலுக்காவுக்கும் சிறப்பு அலுவலரை நியமிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் கடிதம் அனுப்பியுள்ளார்.