உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது.. 50 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு.. பெரும் எதிர்பார்ப்பு

Su.tha Arivalagan
Jan 07, 2024,10:29 AM IST

சென்னை: சென்னையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியுள்ளது. மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.


உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 இன்று காலை நந்தம்பாக்கம் வர்த்தக மைய அரங்கில் கோலாகலமாக தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




50க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். 30,000க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். ஒரு டிரில்லியன் கனவுகள், டைட்டன்ஸ் ஆப் தமிழ்நாடு ஆகிய இலக்குகளுடன் இந்த மாநாட்டை தமிழ்நாடு பெரும் ஆர்வத்தோடு எதிர்நோக்கி உள்ளது.


170க்கும் மேற்பட்ட வர்த்தகப் பிரதிநிதிகளின் உரை மாநாட்டில் இடம் பெறவுள்ளது. 450க்கும் மேற்பட்ட முக்கிய தொழிலதிபர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர் . பல்வேறு அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் இதில் கையெழுத்தாகவுள்ளன.


இந்தியா, அமெரிக்கா,  இங்கிலாந்து, சிங்கப்பூர், வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகள் இங்கு அரங்கம் அமைத்துள்ளன. மாநாட்டு வளாத்தில் சிறுதொழில் முனைவோருக்கான அரங்கம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் அரங்கம், பல்வேறு நாடுகளின் அரங்கங்கள், ஸ்டார்ட்அப் தமிழ்நாடு அரங்கம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.


தமிழ்நாட்டில் நிலவும் தொழில் சூழல், தொழில் தொடங்குவதற்கான உகந்த கட்டமைப்புகள் உள்ளிட்டவை குறித்தும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு எடுத்துக்காட்டப்படவுள்ளது.


இந்த மாநாட்டின் மூலமாக தமிழ்நாட்டுக்கு பெரிய அளவிலான முதலீடுகள் வந்து சேரும் என்ற எதிர்பார்ப்பில் தமிழ்நாடு அரசு உள்ளது.