வயநாடு நிலச்சரிவு... தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி உதவி.. செல்வப் பெருந்தகை அறிவிப்பு

Meenakshi
Jul 31, 2024,07:55 PM IST

சென்னை: கேரள வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.ஒரு கோடி நிவாரண உதவிகள் வழங்கப்பட உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.


இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், கேரள மாநிலம்,வயநாட்டில் கொட்டித்தீர்த்த வரலாறு காணாத அதிக  கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு 160க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.  இந்த இயற்கை சீற்றத்தின் பேரிழப்பை வயநாடு மக்கள் சந்தித்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. தொடர்ந்து 300 பேரை காணவில்லை என்று தேடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரக்கலை தெரிவித்து கொள்கிறோம்.




மீட்புப் பணியை  ஒன்றிய அரசு முடுக்கி விட வேண்டும். இழப்பீடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அதிகளவில் இழப்பிடுகளை தர வேண்டும். மண்மிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக தமிழ்நாடு அரசின் சார்பாக 5 கோடி ரூபாயை நிவாரணத்திற்கு அளித்து இருக்கிறார். அவருக்கு பாராட்டுதலையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக ரூபாய் ஒரு கோடியை துயர் துடைப்பதற்கு வயநாடு மக்களுக்கு உதவுவதற்கு எங்கள் தலைவர் ராகுல் காந்தி சார்பாக அளிக்க இருக்கிறோம். 


பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வதற்கு வயநாடு மாவட்டத்திற்கு அருகில் உள்ள நீலகிரரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் ஊட்டி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினருமான ஆர்.கணேஷ் ஏற்பாட்டில் கூடலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 80 பேர் கொண்ட மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.