நாங்குநேரி மாணவனிடம் தொலைபேசியில் .. நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்

Aadmika
Aug 12, 2023,10:13 AM IST
 சென்னை: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சம்பவத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனமும், வேதனையும் தெரிவித்துள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் வருத்தம் தெரிவித்துள்ளார். சிகிச்சை பெற்று வரும் மாணவனிடம் தொலைபேசி மூலம் பேசி நலம் விசாரித்தார். தாயாருக்கும் ஆறுதல் கூறினார்.

நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி முனியாண்டியின் மகன், வள்ளியூர் அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வருகிறார். பட்டியல் இனத்தை சேர்ந்த அவருக்கும், அதே பள்ளியில் படிக்கும் சில பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் இடையே பல நாட்களாக ஜாதிய ரீதியிலான மோதல்கள் இருந்து வந்துள்ளது. 



இந்நிலையில் ஆகஸ்ட் 09 ம் தேதி இரவு முனியாண்டியின் மகனை வீடு புகுந்து ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி உள்ளது. இதை தடுக்க சென்றவர்களும் தாக்கப்பட்டுள்ளனர். இதை கண்ட முனியாண்டியின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்தார். முனியாண்டியும், அவரது மகனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், முதியவரின் உடலை அடக்கம் செய்ய மறுத்து, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

மாணவர்கள் மோதல் சம்பவம் தொடர்பாக பிளஸ் டூ படிக்கும் 17 வயதுடைய 4 பேர் மற்றும் இரண்டு சிறார்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து நெல்லை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். 

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனை அமைச்சர் தங்கம் தென்னரசு, சபாநாயகர் அப்பாவு ஆகியோர் இன்று நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தனர். மாணவனின் தாயார் அம்பிகாபதிக்கும் ஆறுதல் கூறினர். பின்னர் முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தங்கம் தென்னரசு தொடர்பு கொண்டார். அதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், மாணவனிடம் பேசி நலம் விசாரித்தார். தைரியமாக இருக்குமாறு கூறினார். அதன் பின்னர் மாணவனின் தாயார் அம்பிகாபதியிடமும் பேசி ஆறுதல் கூறினார் முதல்வர்.

முன்னதாக இச்சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பாதிக்கப்பட்ட மாணவனின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் தான் ஏற்பதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அவர் தனது அறிக்கையில்,நாங��குநேரி நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. கொடூரமாக தாக்கப்பட்ட மாணவனின் மருத்துவ, கல்வி செலவை ஏற்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையை சரியாக செய்யும். நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு உண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.