தமிழ்நாட்டில் பொங்கல் கோலாகலம்.. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. சீறிப் பாய்ந்த காளைகள்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் காளைகள் சீறிப் பாய, எதிர்கொண்டு அடக்கினர் வீர இளைஞர்கள்.
தமிழர்கள் கொண்டாடும் மாபெரும் பண்டிகை பொங்கல் திருநாள். இன்று தைப்பொங்கல் திருநாள் தமிழ்நாடு முழுவதும் களை கட்டியிருந்தது. காலையிலேயே சூரியனுக்குப் பொங்கல் வைத்து மக்கள் கோலாகலமாக பண்டிகையை கொண்டாடினர்.
பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலாத் தலங்களிலும் கூட்டம் அலை மோதியது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் மக்கள் கண்டு களித்து வருகின்றனர்.
மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி வழக்கம் போல விமரிசையாக நடந்தது. 800க்கும் மேற்பட்ட காளைகள் இதில் தகுதி பெற்று பங்கேற்றன. 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் உரிய மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு போட்டியில் பங்கேற்றனர். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது குடும்பத்தினரோடு வந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைப் பார்த்து ரசித்தார். அமைச்சர் மூர்த்தி, மதுரை எம்பி சு. வெங்கடேசன், மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். போட்டி தொடங்குவதற்கு முன்பு உறுதிமொழியும் வாசித்து, மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அதன் பின்னரே போட்டி தொடங்கியது.