பிப். 12.. தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்.. ஆளுநர் உரையுடன்.. பரபரப்பு எதிர்பார்ப்பு!

Manjula Devi
Feb 01, 2024,09:04 PM IST

சென்னை:  தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சட்டசபை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.


சட்டப்பேரவையில் பிப்ரவரி 19ஆம் தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாடு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.


மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்துள்ள நிலையில், பிப்ரவரி 12ஆம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதில்  என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.. எதற்கெல்லாம் நிதி ஒதுக்க இயலும்..புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகுமா.. போன்றவை குறித்து தமிழக பட்ஜெட்டில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. 




தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி தமிழகம் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்நிலையில்  தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக, சபாநாயகர் அப்பாவு  செய்தியாளர் சந்திப்பின்போது கூறுகையில், தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கும். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கும். 


இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 19ஆம் தேதி அமைச்சர் தங்கம் தென்னரசு  பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பிப்ரவரி 20ஆம் தேதி 2024 - 25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்  தாக்கல்  செய்யப்படுகிறது.  21ஆம் தேதி 2023- 24 ஆண்டுக்கான முன்பண செலவு மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். இந்த சட்டப்பேரவை நிகழ்வுகள் மற்றும் நடவடிக்கைகளை நேரலையில் முழுமையாக காண்பிக்க வேண்டும் என விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.


கடந்த ஆண்டு ஆளுநர் உரையின்போது, உரையில் சில பகுதிகளை திருத்தியும், சில பகுதிகளைப் படிக்காமலும் விட்டார் ஆளுநர் ஆர். என். ரவி. இது சர்ச்சையைக் கிளப்பியது. இதுதொடர்பாக உடனடியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக் காட்டி அறிக்கை வாசிக்கவே, கோபமடைந்த ஆளுநர் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தார் என்பது நினைவிருக்கலாம். இந்த முறை சுமூகமான கூட்டமாக இது இருக்குமா என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது.