#EnMannEnMakkal.. இன்று அண்ணாமலை நடைபயணம்.. அமித்ஷா தொடங்கி வைக்கிறார்!

Su.tha Arivalagan
Jul 28, 2023,10:39 AM IST
ராமேஸ்வரம்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் நடை பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாடு முழுவதும் பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். என் மண் என் மக்கள் என்ற பெயரில் இந்த நடைபயணத்தை அவர் மேற்கொள்ளவுள்ளார். தமிழ்நாட்டின் கிழக்கு கடல் முனையான ராமேஸ்வரத்திலிருந்து இந்த பயணம் தொடங்குகிறது. இன்று மாலை 5 மணிக்கு ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே இதற்கான விழா நடைபெறுகிறது.



இந்த விழாவில் கலந்து கொண்டு அண்ணாமலையின் நடைபயணத்தை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார். இதில் கலந்து கொள்ளுமாறு பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமித் ஷா வருவதால் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் திரளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடலாம் என்ற செய்தியை சில காலமாகவே  பாஜகவினர் பேசி வருகிறார்கள். இந்த நிலையில் அந்தத் தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்திலிருந்து அண்ணாமலை நடைபயணம் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.



அண்ணாமலையின் நடை பயணத்தில் அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த பாஜகவினர் பெரும் திரளாக கலந்து கொள்ளவுள்ளனர். ராகுல் காந்திக்கு பாரத் ஜோதோ யாத்திரை எந்த அளவுக்கு கை கொடுத்ததோ, காங்கிரஸுக்கு உதவியதோ, அதேபோல அண்ணாமலையின் நடைபயணம், தமிழ்நாடு பாஜகவுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் அக்கட்சியினர் உள்ளனர்.

இந்த நடை பயணமானது 5 கட்டமாக திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நடை பயணம் செல்லும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.  அடுத்த ஆண்டு ஜனவரி 11ம் தேதி இந்த நடை பயணம் முடிவடையும். இந்த நடை பயணத்திலிருந்தே தமிழ்நாடு பாஜகவின் லோக்சபா தேர்தல் பிரசாரமும் தொடங்குவதாக அக்கட்சியினர் கூறுகின்றனர். நடை பயணத்தில் அண்ணாமலையுடன் ஒரு பிரச்சார வாகனமும் உடன் செல்லும். அதிலேயே அண்ணாமலை ஆங்காங்கே ஓய்வெடுக்கும் வசதிகளும் அடங்கியுள்ளது. அந்த வாகனத்தின் வெளிப்புறம் வேண்டும் மீண்டும் மோடி 2024 என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய பாஜக அரசின் சாதனைகளையும் அதில் பட்டியலிட்டுள்ளனர்.

நடைபயணம் முழுமையாக நடைபயணமாக மட்டும் இருக்காது. கிட்டத்தட்ட 1770 கிலோமீட்டர் தொலைவை அவர் நடந்து கடப்பார். பல்வேறு கிராமப் பகுதிகளில் அவர் வாகனங்களிலும் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 10 இடங்களில் அவர் பொதுக்கூட்டத்திலும் பேசத் திட்டமிட்டுள்ளார். அவர் பேசும் பொதுக் கூட்டங்களுக்கு மத்திய அமைச்சர் ஒருவர் கலந்து கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

போகும் வழியெல்லாம் மோடி என்ன செய்தார் என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள சாதனைப் புத்தகங்களையும் பொதுமக்களுக்கு பாஜகவினர் விநியோகிக்கவுள்ளனர்.



தனது நடைபயணம் குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவீட்டில், இன்று, புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் தொடங்கவிருக்கும் #EnMannEnMakkal நடைப்பயணத்தில் பங்கு பெறவிருக்கும் என் அன்பு 
@BJP4TamilNadu சொந்தங்களையும், பாரதப் பிரதமர்  @narendramodi அவர்களின் மக்கள் நலத்திட்டத்தால் பயன் பெற்ற பயனாளிகளையும், பொது மக்களையும் சந்திக்க மிக ஆவலுடன் உள்ளோம்!  

ஊழலில் ஊறித்திளைக்கும் திமுக அரசுக்கு முடிவுரை எழுத, இராமேஸ்வரத்தில் முதல் அடியை எடுத்து வைப்போம் என்று அவர் கூறியுள்ளார்.