"வாக்குறுதி எண் 373.. ஞாபகம் இருக்கா.. மறந்துட்டீங்க பாார்த்தீங்களா".. எடுத்துக் கொடுத்த அண்ணாமலை!

Su.tha Arivalagan
Jan 07, 2024,11:58 AM IST

சென்னை: திமுக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு தந்த வாக்குறுதிகளை அவ்வப்போது நினைவுபடுத்தி விமர்சிக்கும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இப்போது பொங்கல் தொடர்பான ஒரு வாக்குறுதியை எடுத்துக் கூறி இதையும் மறந்து விட்டது திமுக அரசு என்று இடித்துரைத்துள்ளார்.


தமிழ்நாட்டில் பொங்கல் சீசன் தொடங்கி விட்டது. பொங்கல் என்றாலே முதலில் ஜல்லிக்கட்டு வந்து சேரும். புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு வழக்கமாக நடைபெறும். அந்த வகையில் நேற்று தச்சங்குறிச்சியில் கோலாகலமாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது.




இதுகுறித்து அண்ணாமலை ஒரு டிவீட் போட்டுள்ளார். வழக்கம் போல் அதில் திமுக அரசையும் போகிற போக்கில் குட்டியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:


தைத்திருநாளாம் பொங்கல் திருநாளை, விமரிசையாகக் கொண்டாடும் வகையில், நம் தமிழக மக்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் இனிதே தொடங்கியுள்ளது.  வரும் நாட்களில், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளன.


2021 தேர்தலின்போது, 511 தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, அவற்றில் ஒன்றைக் கூட இதுவரை முறையாகச் செயல்படுத்தவில்லை. 


வாக்குறுதி எண் 373:


குறிப்பாக, தேர்தல் வாக்குறுதி எண் 373ல், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்ப்பவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று கூறிய திமுக, அந்த வாக்குறுதியை முற்றிலுமாக மறந்து விட்டது. 


திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, தற்போது மூன்றாவது முறையாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கவிருக்கின்றன. ஆனால், திமுக, ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்ப்பவர்களுக்கு வழங்குவதாகக் கூறிய ஊக்கத்தொகை ரூ.1,000 குறித்துப் பேசுவதே இல்லை.


இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி போலி வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்ற முடியும் என்று திமுக நினைத்துக் கொண்டிருக்கிறது? என்று கேட்டுள்ளார் அண்ணாமலை.