"வீடியோ போடுறேன்".. திமுகவுக்கு திராணி இருந்தால் கைது செய்யவும் - அண்ணாமலை சவால்
Mar 05, 2023,12:36 PM IST
சென்னை: வட மாநிலத் தொழிலாளர்கள் குறித்து தான் அறிக்கை விட்டதற்காக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அதையே வீடியோவாக வெளியிடுகிறேன். திமுகவுக்குத் திராணி இருந்தால் என்னைக் கைது செய்யட்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாகவும் கொலை செய்யப்படுவதாகவும் பொய்யான செய்திகளை, வீடியோக்களை, புகைப்படங்களை வட இந்தியாவில் சில விஷமிகள் வதந்தியாக பரப்பினர். இது காட்டுத் தீ போல பரவி தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு மற்றும் தமிழர்களின் பெயரைக் கெடுக்க திட்டமிட்டு நடந்த சதியாக இது பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர் மட்டுமல்லாமல் அனைத்து மாநில மக்களும் மிக மிக அமைதியாக, நிம்மதியாக இன்னும் சொல்லப் போனால் அவர்களின் சொந்த மாநிலங்களை விட சந்தோஷமாக வாழ்ந்து வரும் சூழலில் இதுபோன்ற விஷமச் செய்திகள் பரவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே உ.பி. பாஜக செய்தித் தொடர்பாளர் பிரஷாந்த் உம்ரா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது பீகார் பாஜக டிவிட்டர் ஹேன்டில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கு அண்ணாமலை பதில் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவீட்டில், வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன்.
திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும். பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள் என்று சவால் விட்டுள்ளார் அண்ணாமலை.