ரஞ்சனா நாச்சியார் செய்தது தப்புதான்.. ஆனால் நோக்கம் நல்லது.. நாராயணன் திருப்பதி

Meenakshi
Nov 04, 2023,07:54 PM IST

சென்னை: நடிகையும், பாஜக கலை, கலாச்சார அணி செயலாளருமான ரஞ்சனா நாச்சியார் குழந்தைகளை அடித்தது சட்டப்படி தவறுதான். ஆனால் அது தார்மீக கோபத்தில் நடந்தது, தவிர்க்க முடியாத தேவை என்றே நான் கருதுகிறேன் என்று தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.


அரசுப் பேருந்தை தடுத்து நிறுத்தி படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்த  மாணவர்களை சரமாரியாக அடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார் துணை நடிகையும், பாஜக கலை மற்றும் இலக்கியப் பிரிவு நிர்வாகியான ரஞ்சனா நாச்சியார். இதையடுத்து பஸ் டிரைவர் கொடுத்த புகாரின் பேரில் தற்போது ரஞ்சனாவை போலீஸார் கைது  செய்துள்ளனர்.


இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கை:




ரஞ்சனா நாச்சியார் என்பவர் பேருந்தின்  படிக்கட்டுகளிலும், பேருந்தின் கூரையிலும் பயணம் செய்து கொண்டிருந்த மாணவர்களை பதட்டத்தோடு கடிந்து கொண்டதோடு விதிகளை மீறி, சட்டத்திற்கு புறம்பாக மாணவர்களை ஏற்றி சென்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனரை உணர்ச்சி வசப்பட்டு தகாத வார்த்தைகளால் திட்டியிருந்தாலும் அவை சமூக அக்கறையுடன் சமுதாய அக்கறையோடு செய்யப்பட்டவையாக தான் கருதப்பட வேண்டும்.


அவரின் கடின வார்த்தைகள் தவறு தான், ஆனால் அந்த வார்த்தைகள் அந்த நேரத்திற்கான தவிர்க்க முடியாத  தேவை தான் என கருதுகிறேன். மாணவர்களை கை நீட்டி அடித்தது சட்டப்படி குற்றம் தான், ஆனால், அது தார்மீக கோபத்தினால், மாணவர்களுக்கு ஏதேனும் நடந்து விடக்கூடாது என்ற அக்கறையினால் நிகழ்ந்தது என்பதை சிறு குழந்தை கூட சொல்லும். நடத்துனரை ஒருமையில் பேசியது சட்ட விரோதமாக இருந்தாலும், அரசு ஊழியர்களின் அலட்சியத்தை தட்டி கேட்காத அதிகாரிகளின் பொறுப்பின்மையினால் எழுந்த கோபம் என்றே எடுத்து கொள்ளபட வேண்டும். 


விளம்பரத்திற்காக செய்திருந்தாலும்


அவர் விளம்பரத்திற்காக அதை செய்திருந்தாலும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் அதை வரவேற்பதில் தவறில்லை. அரசின் அலட்சியத்தை, அதிகாரிகளின் மெத்தனத்தை வெளிக்கொண்டு வந்ததால் அது குற்றமில்லை என கருதப்படலாம். ஆனால், அதையெல்லாம் மீறி, வழக்கு தொடர்ந்து கைது செய்தே  தீர வேண்டும் என்று அரசு நினைத்தால் சட்டப்படி அவர் நீதிமன்றத்தில் எதிர்கொள்ளட்டும்.


ஆனால், சமூக அவலத்தை கண்டித்த ரஞ்சனா நாச்சியாரை  கைது செய்த தமிழக காவல்துறை, பொது மக்கள் முன்னிலையில் நமது பிரதமரை தரக்குறைவாக பேசிய, ஒருமையில் விமர்சித்த தி மு கவின் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்  சிவிஎம்பி எழிலரசனை  கைது செய்யாதது ஏன்? சட்டமன்ற உறுப்பினர் சட்டத்தை மீறலாமா? தரக்குறைவாக பேசலாமா? அவருக்கு நீதிமன்றம் தண்டனை விதிக்காதா? சிறைக்கதவுகள் அவருக்கு திறக்காதா? அரசு இயங்காதா? யார் தவறு செய்தாலும் தண்டிப்பது தான் ஒரு நல்ல அரசுக்கு அழகு. அந்த அரசை பொறுப்பேற்று நடத்தும் முதல்வருக்கு பெருமை. சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கைது செய்யப்பட வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்..


உசுரு முக்கியமாச்சே


தமிழகத்தில் புட்போர்ட் பயணம் அதிகரித்து வருவது வழக்கமான ஒன்றாகி விட்டது.  இப்படி பயணம் செய்வதனால் எத்தனை உயிர்கள் கண்முன்னே வாகன சக்கரங்களால் நசுக்கப்பட்டு கொடூரமான முறையில் இறக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். சிலர் பார்த்து உதவுவார்கள். பலர் கண்டும் காணாமல் போவார்கள். இப்படி இருந்தால் சரியானதாகி விட முடியுமா?.


ஆசிரியர்கள் கையில் பிரம்பு இருந்தவரை குற்றவாளிகளின் எண்ணிக்கை குறைவாக தான் இருந்தது. சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் தான் தண்டனைகள் குறையும். ரஞ்சனா நாச்சியார் செய்தது தான் தவறு என்றால் அவருக்கு மட்டுமே தண்டனை கிடைக்கும். இதில், உள்ள நல்லது கெட்டது என்று ஆராய்ந்து பார்த்து தண்டனை வழங்கப்பட்டால் சமூகத்திற்கும் , வருங்கால சந்ததியினருக்கும் நல்லது. இதை புரிந்தவர்கள் நியாயமாக நடப்பார்கள்.