"ஆளுநர் திருப்பி அனுப்பியது தவறு".. சட்டசபையில் தனித் தீர்மானம்.. 10 மசோதாக்களும் மீண்டும் தாக்கல்

Meenakshi
Nov 18, 2023,05:47 PM IST

சென்னை: சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளை திருப்பி அனுப்பிய செயல் தவறான செயல், ஏற்புடையதல்ல என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


தமிழ்நாடு சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட 10 சட்ட முன்வடிவுகளை ஆளுநர் ஆர். என். ரவி சமீபத்தில் மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பினார். இதையடுத்து மீண்டும் அதே சட்ட முன்வடிவுகளை சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றி மறுபடியும் ஆளுநருக்கே திருப்பி அனுப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.


அதற்காக, சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று கூட்டப்பட்டது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. சபை கூடியதும் சபாநாயகர்  அப்பாவு இரங்கல் குறிப்புகளை வாசித்தார். மறைந்த ஆன்மீகவாதி பங்காரு அடிகளார் மற்றும் மூத்த அரசியல் தலைவர் சங்கரய்யாவிற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதேபோல மறைந்த உறுப்பினர்கள் குறித்தும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதையடுத்து சட்டசபையில் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். 




அதன் பின்னர் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதன் பின்னர் உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்தின் மீது பேசினர். 


இன்றைய சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாக்கள் விவரம்:


தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக உருவாக்கம் தொடர்பான மசோதா

அண்ணா பல்கலைக்கழ சட்டத் திருத்த மசோதா

சென்னை பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

தமிழ் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

தமிழ்நாடு மீன்வள  பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக  மசோதா