2026 சட்டசபைத் தேர்தல்.. 2 ஆண்டுகளுக்கு முன்பே பணியை தொடங்கியது திமுக.. ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு

Su.tha Arivalagan
Jul 20, 2024,08:52 PM IST

சென்னை: 2026 சட்டசபைத் தேர்தல் தொடர்பான ஒரு ஒருங்கிணைப்புக் குழுவை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


திமுக தலைவராக  மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதல் தொடர்ந்து ஒவ்வொரு தேர்தல்களிலும் திமுக வெற்றியைப் பதித்து வருகிறது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளையும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வென்று அசத்தியது. அதைத் தொடர்ந்து நடந்த விக்கிரவாண்டி இடைத் தேர்தலிலும் திமுக பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது.


இந்த நிலையில் அடுத்து மிகப் பெரிய தேர்தலாக வரவிருப்பது 2026 சட்டசபைத் தேர்தல்தான். அதற்காக இப்போதே திமுக தயாராக ஆரம்பித்து விட்டது. வருகிற 27ம் தேதி டெல்லிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும் பிரதமர் மோடியையும் சந்திக்கவுள்ளார். இந்த நிலையில் இன்று இரவு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது திமுக.




அதாவது 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவை திமுக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:


2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக பணிகளை ஒருங்கிணைக்கவும் மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்பு குழு தனது பணிகளை மிகச் சிறப்பாக செய்தது. அதே வகையில் வரவிருக்கும் 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு கழகத்தில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் அமைப்பு ரீதியான சீரமைப்புகளை கழகத் தலைவருக்கும் தலைமைக்கும் பரிந்துரைக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒருங்கிணைப்பு குழு பின்வருமாறு அமைக்கப்படுகிறது.


கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டுக் கட்சிகளிலேயே முதல் ஆளாக திமுக சட்டசபைத் தேர்தல் பணிகளைத் தொடங்கியிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக பல்வேறு தேர்தல் தொடர்பான பணிகளை முன்கூட்டியே முடித்து விடவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக கூட்டணி உள்ளிட்ட விவகாரங்களையும் அடுத்தடுத்து இறுதி செய்யவும் திமுக திட்டமிட்டிருப்பதாக ஒரு பேச்சு உள்ளது. எல்லாப் பணிகளையும் சீக்கிரமே முடித்து விட்டு மக்களிடம் செல்லும் பணிகளில் திமுக தீவிரம் காட்டவுள்ளதாகவும் கூறப்படுகிறது.