நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டும்.. நீட்டை ரத்து செய்ய வேண்டும்.. சட்டசபையில் தீர்மானம்

Su.tha Arivalagan
Jun 28, 2024,05:37 PM IST

சென்னை: நீட் விலக்கு மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தமிழ்நாடு சட்டசபையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.


தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நீட் தேர்வு தொடர்பாக ஒரு தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசினார். பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:




மருத்துவத் துறையிலும் பல்வேறு பொது சுகாதாரக் குறியீடுகளிலும் நாட்டிற்கே முன்னோடியாக நம்முடைய தமிழ்நாடு திகழ்கிறது. பல ஆண்டுகளாக நமது தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்ட சிறப்பான மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை முறைதான் இந்த சாதனைகளுக்கு அடிப்படையாக விளங்குகிறது. முனைவர் அனந்த கிருஷ்ணன் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில் பட்ட படிப்புகளுக்கான நுழைவு தேர்வு ரத்து செய்து இந்த சாதனைகளுக்கு அடித்தளம் அமைத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.


பள்ளிக்கல்வி மதிப்பெண்களின் அடிப்படையில் சமூக நீதியையும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கு சம வாய்ப்பையும் உறுதி செய்யக்கூடிய முன்னோடி சேர்க்கை முறையை நாம் பின்பற்றி வருகிறோம். இந்த முறையால் தான் தமிழ்நாட்டின் அனைத்து பகுதியில் இருந்தும் மருத்துவர்கள் உருவாகவும் அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்கிடவும் முடிந்தது. ஆனால் 2017 ஆம் ஆண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை ஒன்றிய அரசு கட்டாயமாக்கிய பின்பு இந்த நிலை முற்றிலும் மாறி மருத்துவ படிப்பு என்பது ஏழை எளிய மாணவர்களுக்கு எட்டாக்கனி ஆகிவிட்டது.


பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல முடியாத கிராமப்புற ஏழை எளிய மாணவர்களால் இந்த தேர்வில் வெல்ல இயலாது. அது மட்டுமல்ல கிராமப்புற பகுதிகளிலும் பின்தங்கிய பகுதிகளிலும் வழங்கப்படும் மருத்துவ சேவைகளையும் எதிர்காலத்தில் இந்த முறை பாதிக்கும் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் நீட் நுழைவு தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே அதனை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். திமுக சார்பில் மட்டுமல்ல இளைஞரணி சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன குறிப்பாக மாணவர் அணியையும் மருத்துவர் அணியும் ஒருங்கிணைத்து நீட் விலக்கு நம் இலக்கு என்ற மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இவற்றையெல்லாம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி தன்னுடைய பரிந்துரையில் விரிவாக எடுத்து சொல்லியிருந்தார்.


நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்கள் அரசியல் கட்சிகள் சமூக சிந்தனையாளர் என அனைவரிடமும் அசைக்க முடியாத கருத்து ஒற்றுமை நிலவி வருகிறது. இதன் அடிப்படையில் ஓய்வு பெற்ற நிதியரசர் ஏகே ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த பேரவையில் 13. 9. 2021 அன்று தமிழ்நாடு மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம் 2021 என்ற சட்ட முன் வடிவு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகும் ஆளுநரால் அதற்கான ஒப்புதல் வழங்கப்படாமல் மறுபரிசீலனை செய்திட திருப்பி அனுப்பப்பட்டது. இந்நிலையில் என் தலைமையில் 5. 2. 2022 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு இந்த சட்ட முன்வடிவினை மீண்டும் தமிழ்நாடு சட்ட பேரவையில் அறிமுகப்படுத்துவது தொடர்பான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு 8.2.2022 அன்று சட்டம் முன்பு மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு ஆளுநரால் அனுப்பப்பட்டு இதுகுறித்து மத்திய அரசால் கூறப்பட்ட அனைத்து விளக்கங்களுக்கும் தமிழ்நாடு அரசு உடனுக்குடன் உரிய பதில்களை வழங்கி உள்ள நிலையிலும் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.


இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வின் போது அரங்கேறியுள்ள சம்பவங்கள் போட்டி தேர்வுகள் மீது நமது மாணவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிலைகுலைய செய்துள்ளன. இதுவரை இருந்திராத அளவிற்கு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் குழு மதிப்பெண் பெற்றது, தேர்வுகள் காலதாமதமாக தொடங்கியதாக காரணம் காட்டி விதிகளில் இல்லாத முறையில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதால் இந்த கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு இவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட்டது. பல்வேறு தேர்வு மையங்களில் தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் வெளியானதாக தகவல்கள் தேர்வு மையத்தில் தேர்வு கண்காணிப்பாளரே விடைத்தாள்களை நிரப்பிய ஊழல் என குவிந்துள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகாலமாக உழைத்து, பெரும் செலவழித்து இந்த போட்டிற்கு தயாரான மாணவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.


இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்து தவறே நடைபெறவில்லை என்று கூறிய ஒன்றிய அரசு பின்பு மாண்பமை உச்சநீதிமன்றத்தில் குட்டு வாங்கிய பின்னரே இந்த தேர்வை நடத்தும் என் டி ஏ அமைப்பின் தலைவரை மாற்றி உள்ளது. தேர்வு முறைகேடுகள் குறித்து எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட்டுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவு தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


பல ஆண்டு காலமாக நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு தமிழ்நாட்டு மக்களும் தனியே போர் தொடுத்து வந்த நிலையில் நீட் தேர்வின் உண்மையான அவல நிலையை உணர்ந்து பல்வேறு மாநிலங்களில் இதற்கு எதிரான எதிர்ப்பு கிளம்பி வருகின்றது. தமிழ்நாட்டின் குரல் இன்று இந்தியாவின் குரலாக நாடு முழுவதும் எதிரொலிப்பதை அன்மை நிகழ்வுகள் காட்டுகின்றன. மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மாநில அரசுகளே முடிவெடுத்த பழைய நிலையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமருக்கே கடிதம் எழுதியுள்ளார். மக்களவை எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச மாநிலம் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பிஹார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் என பலரும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கடிதம் எழுதி இருக்கிறார்கள்.


இந்த சூழலில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற நாம் எடுத்த முயற்சிகளை வெற்றி அடையச் செய்யவும், தேசிய அளவில் நீட் தேர்வை அறவே அகற்றிடச் செய்யவும் தேவையான முன்னெடுப்பாக இந்த மாமன்றம் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


தீர்மானம்


கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும் வகையிலும் பள்ளிக்கல்வியை அவசியமற்றதாக்கும் வகையிலும் மாநில மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் உரிமையை மாநில அரசிடமிருந்து பறிக்கும் வகையிலும் அமைந்துள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும் . இந்த தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்து பள்ளிக்கல்வியில் மாணவர்கள் பெரும் பனிரெண்டாவது வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்காக இந்த சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்டம் முன்வடிவிற்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வேண்டும்.


பல முறைகேடுகளுக்கு வழி வகுத்து வரும் இந்த தேர்வு முறையை பல்வேறு மாநிலங்களும் தற்போது எதிர்த்து வரும் நிலையில் தேசிய அளவில் நீட் தேர்வு முறை கைவிடப்படும் வகையில் தேசிய மருத்துவ ஆணையம் சட்டத்தில் தேவைப்படும் திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் சட்டப்பேரவை ஒரு மனதாக வலியுறுத்துகிறது என்று முதல்வர் குறிப்பிட்டார்.