தமிழ்நாடு, புதுச்சேரிக்கு ஏப்ரல் 19ம் தேதியே தேர்தல்.. விளவங்கோடுக்கும் அதே நாளில்தான்!

Manjula Devi
Mar 16, 2024,08:49 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல்  ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி  நடைபெறும் எனவும், இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெறும் எனவும்  தலைமை தேர்தல் அதிகாரி ராஜிவ் குமார் அறிவித்துள்ளார்.


ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை லோக்சபா தேர்தல் நடத்தப்படும். கடந்த 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற்றது. தற்போது இந்த வருடம் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த ஒரு மாத காலமாக லோக்சபா தேர்தல் எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்பு மக்களிடையே பெரும் பரபரப்பாக காணப்பட்டு வந்தது. இதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும், கூட்டணி கட்சிகளும் தங்களுக்கான தொகுதி பங்கீடு குறித்த தீவிர தேர்தல் பணிகளில் மும்மரம் காட்டி வந்தனர்.


இந்த நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் மார்ச் 20ல் தொடங்கி, மார்ச் 27ல் முடிவடையும். இந்த மனுக்கள் மார்ச் 28ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 30 ஆகும்.


 


மார்ச் 19ஆம் தேதி 39 தொகுதியிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.


புதுச்சேரியில் உள்ள ஒரே ஒரு லோக்சபா தொகுதியிலும் ஏப்ரல் 19ம் தேதிதான் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கும் இதே அட்டவணைதான்.


தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் அட்டவணை


வேட்பு மனு தாக்கல் தொடக்கம் -  மார்ச் 20

வேட்பு மனு தாக்கல் முடிவு - மார்ச் 27

வேட்பு மனுக்கள் பரிசீலனை - மார்ச் 28

மனு வாபஸ் பெற கடைசி நாள் - மார்ச் 30

வாக்குப் பதிவு நாள் - ஏப்ரல் 19

வாக்கு எண்ணிக்கை - ஜூன் 4


விளவங்கோடு சட்டசபை இடைத் தேர்தல்


விளவங்கோடு சட்டசபைத் தொகுதிக்கான இடைத் தேர்தலும் ஏப்ரல் 19ம் தேதியே நடைபெறவுள்ளது. அங்கும் இதே அட்டவணைதான் செயல்படுத்தப்படும். விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விஜயதாரணி எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவர் தற்போது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் போய்ச் சேர்ந்து விட்டார். இதனால் அங்கு இடைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.