"மதுரையில் 'கேப்டன்' விஜய்காந்த்துக்கு சிலை.. சென்னை சாலைக்கு அவரது பெயர் சூட்ட வேண்டும்"

Meenakshi
Dec 29, 2023,04:08 PM IST

சென்னை:  மறைந்த "கேப்டன்" விஜயகாந்த் பிறந்த மதுரை மாவட்ட தலைநகரான மதுரையில் அவருக்கு முழு உருவ சிலை ஒன்றை அரசு சார்பில் நிறுவ வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, தமிழ்  திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம்  கோரிக்கை வைத்துள்ளது.


விஜயகாந்த் தமிழ்நாட்டு மக்களிடமிருந்து விடைபெற்றுச் சென்று விட்டார். அவரது நினைவுகளை அனைவரும் பகிர்ந்து வருகின்றனர். கூடவே பல்வேறு கோரிக்கைகளும் எழ ஆரம்பித்துள்ளது.


நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த நிலையில், மதுரையில் அவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் வைத்துள்ளது.


இதுதொடர்பாக அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:




தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாக சுமார் 40 ஆண்டு காலம், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை  ஆரம்பித்து தமிழக அரசியலில்  18 ஆண்டு காலமும் சிறப்பாக செயல்பட்டவரும், தமிழக சட்டப்பேரவையில் இரண்டு முறை உறுப்பினராகவும், ஒரு முறை எதிர் கட்சி தலைவராகவும், கேப்டன் என்று  எல்லோராலும் அன்பாக அழைக்கபட்டவருமான விஜயகாந்த் நேற்று  உடல் நலமின்றி  காலமானார்.


அவர் மறைவுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள்  சங்கம்  சார்பில் நேரில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு  ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ்நாடு அரசுக்கு சங்கம் சார்பில் முக்கியமான 3 கோரிக்கைகள் கீழ் வருமாறு வைக்கிறோம்:


1. மறைந்த 'கேப்டன்' விஜயகாந்த் அவர்கள் வசித்து வந்த சென்னை சாலிகிராமம் அல்லது விருகம்பாக்கம்  பகுதியில்  உள்ள பிரதான சாலைக்கு 'கேப்டன்' விஜயகாந்த் சாலை அல்லது 'புரட்சிக்கலைஞர்' விஜயகாந்த் சாலை என பெயரிட வேண்டும்.


2. தமிழக அரசால் வழங்கப்படும் திரைத்துறை விருதுகளில், இனி 'கேப்டன்' விஜயகாந்த் விருது அல்லது 'புரட்சிக்கலைஞர்' விஜயகாந்த் பெயரில் சிறப்பு விருது வழங்க ஆவண செய்ய வேண்டும் .


3.  மறைந்த 'கேப்டன்' விஜயகாந்த் அவர்கள் பிறந்த மதுரை மாவட்ட தலைநகரான மதுரையில் 'கேப்டன்' விஜய்காந்த் அவர்களின் முழு உருவ சிலை ஒன்றை அரசு சார்பில் நிறுவ வேண்டும். 


திரைத் துறையிலும் அரசியலிலும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் செய்த காலத்தால் அழியாத சாதனைகளை பறை சாற்றும் விதமாக,  இந்த கோரிக்கைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி மற்றும் செய்தித் துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன், சென்னை மேயர் ப்ரியா ஆகியோருக்கு வேண்டுகோளாக முன் வைக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.