ஹிஜாப் போட்டு வராத பெண்களுக்கு.. ஹோட்டல்களில் நுழைய தலிபான்கள் தடை!

Su.tha Arivalagan
Apr 11, 2023,02:56 PM IST
காபூல்:  ஹிஜாப் போட்டு வராமல் பெண்கள் ஹோட்டல்களுக்கு வருவதால், அவர்கள் ஹோட்டல்களுக்கு வருவதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர். 

தோட்டங்கள், புல்வெளிகளுடன் கூடிய ஹோட்டல்களுக்கு இந்த தடையை ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாண தலிபான் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுபோன்ற இடங்களுக்கு குடும்பத்துடன் வரும் பெண்கள் ஹிஜாப் அணிந்து வருவதாக மத குருமார்கள் தலிபான் அரசிடம் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். இதையடுத்து இந்த தடையை அரசு அறிவித்துள்ளது. ஹெராட் மாகாணத்தில் உள்ள புல்வெளிகள்,தோட்டங்களுடன் கூடிய ஹோட்டல்களுக்கு மட்டுமே தற்போது இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சாதாரண ஹோட்டல்களுக்கு தடை இல்லை.



புல்வெளிகள், தோட்டங்கள் இருக்கும் ஹோட்டல்களில் ஆண்களும், பெண்களும் தனிமையில் சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் இந்த இடங்களில் பெண்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக ஹெராட் மாகாண நிர்வாகம் விளக்கியுள்ளது. 

அதேபோல  பொது வெளிகளில் உள்ள பூங்காக்களை தொடர்ந்து கண்காணிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாம். அங்கு வரும் பெண்கள் ஹிஜாப் அணிந்து வருகிறார்களா.. ஆண்களுடன் வருகிறார்களா, தனியாக வருகிறார்களா என்பது குறித்து கண்காணிக்கப்படவுள்ளதாம்.

ஏற்கனவே 6வது வகுப்புக்கு மேல் பெண்கள் படிக்கக் கூடாது, பல்கலைக்கழகங்களுக்குச் செல்லக் கூடாது, பல்வேறு வகையான வேலைகளுக்கு பெண்கள் போகக் கூடாது என்று ஆப்கானிஸ்தானை ஆட்டிப்படைத்து வரும் தலிபான் அரசு பெண்களை தடுத்து வருகிறது. உடற்பயிற்சி கூடங்களுக்கும் பெண்கள் செல்ல தடை உள்ளது. இப்போது இந்தத் தடையை விதித்துள்ளனர்.

2021ம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தான் நாடு தலிபான்கள் வசம் இருந்து வருகிறது.  அப்போது முதல் ஆப்கானிஸ்தானில் பெண்களின் நிலை மோசமாக மாறி விட்டது. கிட்டத்தட்ட வீட்டோடு முடங்கும் நிலைக்கு பெண்கள் போய் விட்டனர். ஆண் துணை இல்லாமல் அவர்களால் வெளியில் சுதந்திரமாக நட மாட முடியாத நிலை உள்ளது.