தெரு நாய்களை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை .. மேயர் பிரியாவுக்கு கார்த்தி சிதம்பரம் கோரிக்கை
சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் அதிகரித்து வரும் தெரு நாய்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மேயர் பிரியாவுக்கு காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை மாநகராட்சி பகுதியில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்தத் தெரு நாய்களால் சாலைகளில் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்களை துரத்தி கடித்து குதறும் அபாயம் நிலவி வருகிறது. அதே சமயம் மக்கள் அதிகம் நடமாடும் முக்கிய சாலை பகுதிகளில் திரியும் தெரு நாய்களால் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை மாநகராட்சி சார்பில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களைப் பிடித்து கருத்தடை, இன விருத்தி கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதேபோல் தெருநாய் தொல்லைக்கு புகார் அளிக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் 1913 என்ற உதவி எண்களும் அறிவிக்கப்பட்டு, அந்த எண் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது. இருப்பினும், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் சென்னை மாநகர மேயர் பிரியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னையில் சுமார் 1.80 லட்சத்திற்கும் மேற்பட்ட தெருநாய்கள் உள்ளன.அதில் 73% நாய்கள் கருத்தடை செய்யப்படாமல் உள்ளது. இதனால் மாநகராட்சி பகுதிகளில் அதிகரித்து வரும் தெரு நாய்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.