இந்து முறைப்படி திருமணம் செய்த தைவான் நாட்டு காதல் ஜோடி.. மயிலாடுதுறையில் அசத்தல்!

Meenakshi
Feb 20, 2024,04:20 PM IST

மயிலாடுதுறை: தமிழ் கலாசாரத்தின் மீது கொண்ட காதல் காரணமாக தைவான் நாட்டு காதல் ஜோடி ஒன்று இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.


கடந்த காலங்களில் எல்லாம் இந்திய பெண்ணை வெளிநாட்டு மணமகன் திருமணம் செய்தல், அல்லது இந்திய  மணமகனை  வெளிநாட்டு மணமகள் திருமணம் செய்தல் போன்ற நிகழ்ச்சிகள் தான் நடக்கும். இவ்வாறு நடப்பது தற்போதைய காலத்தில் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், இப்போது வெளிநாட்டு காதல் ஜோடி இந்தியா வந்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.




இந்த சம்பவம் எங்கு நடந்துள்ளது தெரியுமா? நம்ம சீர்காழியில் தான் இது  நடந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அமைந்துள்ள காரைமேடு சித்தர்புரத்தில் 18 சித்தர்கள் அருள் பாலிக்கும் மிகப் பிரசித்தி பெற்ற ஒளிலாயம் சித்தர்பீடம் அமைந்துள்ளது.  இங்கு தமிழகம் மற்றும் இன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடுவர்.


இந்த சிறப்புமிக்க சித்தர் பீடத்தில் இன்று தைவான் நாட்டை சேர்ந்த யோங் சென் என்ற ஆராய்ச்சியாளரும் ருச்சென் ஆசிரியர் இருவரும் இன்று இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். முன்னதாக இருவரும் காதலித்து வந்த நிலையில் தைவான் நாட்டில் திருமணம் செய்து கொண்டனர். இதைத்  தொடர்ந்து இந்தியாவிலும்  இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள இருவரும் விரும்பியுள்ளன. தமிழ் கலாசாரம் மீது கொண்ட காதல் காரணமாக தமிழ்நாட்டில் தமிழ்கலாச்சார முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்து இங்கு வந்துள்ளனர்.இதையடுத்து கிராம மக்கள் ஒன்றுகூடி இவர்களின் திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்து வாழ்த்தியுள்ளனர்.


இதற்காக மணப்பெண் ருச்சென் தமிழ் முறைப்படி பட்டுச்சேலை, மாலை அணிந்து மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார், மணமகன்  யோங் சென்னும் பட்டு வேட்டி, பட்டு சட்டை, சாலை அணிந்து மேடைக்கு வந்தார்.மேடையில் ஐயர் யாகம் வளர்ந்து மந்திரங்கள் கூற இருவரும் ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றிக் கொண்டனர்.அதன் பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார்.மணமக்களுடன் தைவான் நாட்டில் இருந்து வந்தவர்கள் சேலை, வேட்டி அணிந்து இருந்தனர். அந்த ஊர்மக்கள் அனைவரும் அட்சதை தூவி வாழ்த்தினர்.பின்னர் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து யோங் சென் ருச்சென் காலில் மெட்டி அணிவித்தார்.இவர்களது திருமணம் பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.