தச்சங்குறிச்சியைக் கலக்கிய முதல் ஜல்லிக்கட்டு.. 12 காளைகளை அடக்கிய சுகேந்தர்.. பல்சர் பைக் பரிசு!

Meenakshi
Jan 06, 2024,06:34 PM IST

தச்சங்குறிச்சி: புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில், 2024ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில், 12 காளைகளை அடக்கிய சுகேந்தர் என்ற இளைஞருக்கு முதல் பரிசாக பல்சர் பைக் கிடைத்துள்ளது.


பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் முழுவதும் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும். அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் புகழ்பெற்றவை.  இருப்பினும், ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் தொடங்கும்.


2024 ஆம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த தச்சங்குறிச்சியில் இன்று கோலாகலமாக தொடங்கியது. போட்டியின் முதல் சுற்றில் இருந்து காளைகள் களத்தில் சீறிப் பாய்ந்தது. காளைகளை அடக்குவதற்கு வீரர்களும் சிறிப்பாய்ந்தனர். பார்ப்பவர்களின் கண்களை கவரும் அளவிற்கு போட்டிகள் நடைபெற்றது.




ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகளை பரிசோதிப்பதற்காக கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராமச்சந்திரன் தலைமையில் மருத்துவர் குழு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. குறிப்பாக காயமடையும் காளைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பிரத்தியேக  வசதிகள் செய்யப்பட்டிருந்தது.  காயம் அடையும் வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 


415 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு போட்டியில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் பார்த்துக் கொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 


அமைச்சர் ரகுபதி உறுதிமொழி வாசிக்க, மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டு போட்டி ஆரம்பமாகியது. இந்த போட்டியில் 800க்கும் மேற்பட்ட காளைகளும், 297 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கும் இந்த ஜல்லிக்கட்டு போட்டி பத்து சுற்றுகலாக  நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் பரிசாக  பல்சர் பைக்  அறிவிக்கப்பட்டிருந்தது. தச்சங்குறிச்சியில் நடைபெற்ற பேட்டியில் 12 காளைகளை அடக்கிய சுகேந்த்திற்கு முதல் பரிசாக பல்சர் பைக் கிடைத்துள்ளது.