400 பேரை வேலையை விட்டு நீக்கிட்டு.. ஸ்விக்கி எடுத்துள்ள அதிரடி முடிவு.. ஷாக்கில் ஊழியர்கள்!

Su.tha Arivalagan
Jan 26, 2024,06:13 PM IST

டெல்லி: ஸ்விக்கி நிறுவனம் 400 ஊழியர்கள் வரை வேலையை விட்டு நீக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் ஸ்விக்கி ஊழியர்களிடையே அதிர்ச்சி அலைகள் பரவி வருகின்றன.


வருடம் பிறந்ததும் ஒவ்வொரு நிறுவனமாக வேலையை விட்டு ஆட்களை நீக்குவது வழக்கமாக்கி வருகின்றன. கூகுள் நிறுவனம்  கடந்த வருடத்தைப் போலவே, இந்த வருஷமும் வேலை நீக்கம் இருக்கும் என்று சுந்தர் பிச்சை சொல்லி விட்டார். கூகுளே ஆரம்பித்து வைத்திருப்பதால் அடுத்தடுத்து பல்வேறு நிறுவனங்களும் இந்த வேலையைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில் ஸ்விக்கி நிறுவனம் தனது நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் சுமார் 400 பேரை வேலையை விட்டு நீக்க தீர்மானித்துள்ளதாம். கடந்த ஆண்டு 380 பேரை வேலையை விட்டு நீக்கியிருந்தது ஸ்விக்கி. அதேபோல இந்த ஆண்டும் ஆட்குறைப்பில் ஸ்விக்கி இறங்குகிறது.




செலவுக் குறைப்பு நடவடிக்கையாக தனது ஊழியர்களில் 7 சதவீதம் பேரை நீக்க ஸ்விக்கி திட்டமிட்டுள்ளது. ஸ்விக்கி நிறுவனத்தில் 6000 பேர் பணியாற்றி வருகிறார்கள். இந்த முறை தொழில்நுட்பப் பிரிவு, வாடிக்கையாளர் சேவை மற்றும் கார்ப்பரேட் பிரிவுகளில் ஆட் குறைப்பு இருக்கும் என்று தெரிகிறது.


ஆட்குறைப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும் கூட எப்போது இது மேற்கொள்ளப்படும் என்று தெரியவில்லை. 


கடந்த ஆண்டு கூகுள், டிவிட்டர், அமேசான், ஆல்பாபெட், மைக்ரோசாப்ட், மெட்டா என பெரிய பெரிய நிறுவனங்களைச் சேர்ந்த பல ஆயிரம் பேருக்கு வேலை போனது என்பது நினைவிரு்கலாம். உலகம் முழுவதும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஜனவரியில் இதுவரை உலகம் முழுவதும் முன்னணி நிறுவனங்கள் கிட்டத்தட்ட 7500 பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.