ஆயிரத்து 500 ரூபாய் மிச்சம் (சிறுகதை)

Aadmika
Oct 23, 2024,11:03 AM IST

- சொர்ணலட்சுமி


அத ஒரு சாதாரண குடும்பம்.. ஜானகியும் அப்படித்தான்.. இருப்பதை வைத்து சிக்கணமாக குடும்பம் நடத்தும் இல்லத்தரசி. கணவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான பெரிய வேலை எல்லாம் இல்லை. பட்ஜெட் போட்டு அதற்குள் ஓடுகிறது குடும்பம். ஒரே ஒரு பெண் குழந்தை. 


ஜானகிக்கு சிறு வயது முதலே தான் விரும்பிய எதுவும் கிடைத்தது கிடையாது. ஆசைகள் அனைத்தையும் தனக்குள்ளேயே தேக்கி வைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். சரி கல்யாணத்திற்குப் பிறகு கணவர் மூலமாக நமது ஆசைகளை நிறைவேற்றிக்கலாம் என்று கனவுகளை தற்காலிகமாக அணை போட்டு வைத்திருந்தாள். திருமணத்திற்கு பிறகும் தனது கணவர் மிக குறைவான வருமானம் கொண்டவர் என்பதால், கமா போட்டு வைத்திருந்த ஆசைகளுக்கு முற்றுப்புள்ளி போட்டு விட்டு விட்டாள். கணவரின் மாத சம்பளம் ரூ.10,000 தான் என்பதால் அதற்குள் குடும்ப செலவுகள், குழந்தையின் படிப்பு, மருத்துவ செலவு ஆகிய அனைத்தையும் அடக்கி, சிக்கனத்தையும் சிக்கனமாக கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை.




நாட்கள் நகர்ந்தது. பெண் குழந்தை வளர்ந்து மூன்றாம் வகுப்பு சேர்ந்தாள். தன்னுடைய சிறு வயதில் நிறைவேறாத ஆசைகளை எல்லாம் தன்னுடைய மகள் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள நினைத்தாள் ஜானகி. அவளது ஆசைகளிலேயே பெரிய ஆசை என்னன்னா, சிறு வயதில் இசை கற்றுக் கொள்ள வேண்டும் என்பது. ஆனால் அவளது அப்பா அதற்கு அனுமதிக்கவில்லை. பாவம் அவருக்கு வருமானம் குறைவு. பெண் குழந்தையை பள்ளிக்கு அனுப்புவதே பெரிய விஷயமாக அவருக்கு தோன்றியது. 


தன் அப்பா தனக்கு கொடுக்காத வாய்ப்பை, தான் தன்னுடைய மகளுக்கு கொடுக்க வேண்டும் என நினைத்தாள் ஜானகி. பெரிய இசை வகுப்பில் அவளை சேர்த்து படிக்க வைக்க ஆசை தான். ஆனால் பொருளாதார நிலை இடம் கொடுக்கவில்லை. அதற்காக தன்னுடைய ஆசையை கைவிடவும் இவளுக்கு மனமில்லை. அதனால் ஒரு சிறிய இசை பயிற்சி மையத்தில் தன்னுடைய பிள்ளையை சேர்க்க சென்றாள். அந்த இசை ஆசிரியரும் கற்றுக் கொடுத்த சம்மதம் தெரிவித்தார். ஆனால், அதற்கு அவர் கட்டணமாக கேட்டது ரூ.1500. 


1500 என்ற அந்த தொகை அவளுக்கு பெரியது. அது அவளை யோசிக்க வைத்தது. பேசாமல், இந்த பணத்தை கட்டி தானே இசை வகுப்பில் சேர்ந்து படித்து, நாம் கற்றுக் கொண்டு, பிறகு அதை தன்னுடைய பிள்ளைக்கு அதை சொல்லி கொடுத்து விடலாமா என்று எண்ண வைத்தது, அவளுக்குள் இருந்த நிறைவேறாத ஆசைகளின் ஏக்கங்கள். ஆனாலும், இனி தான் இசை கற்றுக் கொண்டு என்ன செய்ய போகிறோம் என்று பின்னாடியே சராசரி குடும்ப தலைவியாக, ஒரு தாயின் மனதும் ஓடி வந்து அந்த நினைப்புக்கு அணை போடட்து. மகளைப் படிக்க வைத்து பார்க்க ஆசைப்பட்டது.


தன்னுடைய வீட்டு தேவைகள், செலவுகள் என எவற்றில் எல்லாம் சிக்கனத்திற்கே சவால் விடும் வகையில் மிச்சம் பிடித்து 1500 நூபாயை தேற்றி மகளை இசை வகுப்பில் ஒரு வழியாக சேர்த்து விட்டாள். முதல் நாள் இசை வகுப்பிற்கு சென்றாள் மகள். வகுப்பு முடிந்து எப்போது மகள் வீடு திரும்புவாள் என வாசலையே ஆவலாக பார்த்துக் கொண்டே நின்றாள் ஜானகி. அவளது இசை மனதுக்குள் ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் மீண்டும் முகிழ்த்து ஜலதரங்கம் வாசித்துக் கொண்டிருந்தன.


மகளும் வந்து சேர்ந்தாள்.. உற்சாகமாக வந்த மகளை வாரி அணைத்து அவளுக்கு தேவையானதை செய்து கொடுத்தாள் ஜானகி. வீட்டிற்கு திரும்பிய மகள், மேஜையில் தன்னுடைய இசை வகுப்பு நோட்டை போட்டு விட்டு, விளையாட தயாராகிக் கொண்டிருந்தாள். அந்க நோட்டின் அட்டை காற்றில் மெல்ல படபடத்து திறக்க முயற்சித்தது. அதைப் பார்த்த ஜானகியின் மனதும் கூடவே பரபரத்தது.




தன்னையும் மீறி ஆவல் மேலிட குழந்தையை போல் துள்ளிச் சென்று அந்த நோட்டை ஆர்வமாக, ஆசையுடன் எடுத்து பக்கங்களைப் புரட்டிப் பார்த்தாள். அதில், ச ரி க ம ப த நி என்ற ஸ்வரம் வரிசைகள். அதை பார்த்ததும் கண்களில் தண்ணீர் அருவியாக கொட்டியது... அது கண்ணீர் அல்ல.. உள்ளுக்குள் உறைந்து போய்க் கிடந்த ஏக்கங்களின் வெடிப்பு, பெருமழையின் உச்சம், எதிர்பார்ப்புகளின் பிரளயம்.. ஆசைகளின் அதி வேகம்.. ஆனந்தம்..


ஸ்வரங்களை விரல்கள் மெல்லத் தழுவ.. தானாக வாய் முனுமுனுக்கத் தொடங்கியது.. உதடுகள் பிரித்து அதை பாடி பார்த்தாள்.. மனசெல்லாம் மார்கழி மாதத்துக் குளிரை மொத்தமாக உணர்ந்து குளிர்ந்தது.. தன்னை கட்டுக்குள் கொண்டு வந்து, மகளை அருகில் அழைத்து, முதல் நாள் வகுப்பில் என்ன கற்றுக் கொடுத்தார்கள் என ஆவலாக கேட்டு தெரிந்து கொண்டாள். மகளுடன் சேர்ந்து தானும், ச ரி க ம ப த நி என பாட துவங்கினாள்.


கண்களில் வழிந்தோடிய நீரில் நோட்டில் இருந்த ச ரி க ம.....மெல்ல மறைய துவங்கியது. கண்களில் வற்றாத ஊற்றாக கண்ணீர் ஊற்றாக பொங்கி வந்தாலும், மனதின் ஓரத்தில் மகிழ்ச்சி. மகள் ஆசையும் நிறைவேறியது.. மகள் மூலமாக தன்னுடைய ஆசையும் நிறைவேறியது .. இன்னொரு 1500 ரூபாயையும் மிச்சப்படுத்திய பெருமிதம் மறுபக்கம்!


அந்த இல்லம் இசை வெள்ளத்தில் மிதக்கத் தொடங்கியது.. மனசும்தான்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்