நவம்பர் 14.. குழந்தைகள் தினத்தன்று.. திரைக்கு வருகிறது சூர்யாவின் பிரமாண்ட கங்குவா!

Meenakshi
Sep 19, 2024,12:11 PM IST

சென்னை:  நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம், அக்டோபர் 10ம் தேதி வருவதாக இருந்த நிலையில், அந்த சமயத்தில் வேட்டையன் படத்தை திரையிட முடிவு செய்ததால் தற்போது குழந்தைகள் தினமான நவம்பர் 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


சூர்யாவின் கங்குவா படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார்.இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். அவர் இசையமைப்பில் வெளிவந்த ஃபயர் சாங் அண்மையில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சூர்யா ஏழு வேடங்களில் நடிக்கிறாராம்.இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார். 




இந்த படத்தில்  வில்லனாக இந்தி நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் நடராஜன் சுப்ரமணியம், ஜெகபதி பாபு, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ், ரவி ராகவேந்திர மற்றும் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். அது மட்டுமின்றி இப்படத்தில் நடிகர் கார்த்தியும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.


கங்குவா படம் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சூர்யாவில் கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படமாக கங்குவா உருவாகிறது. இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. கங்குவா திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி,ம லையாளம் உள்பட 10 மொழிகளில் இப்படம் வெளியிடப்பட உள்ளது. மேலும் கங்குவா திரைப்படம் 2 பாகங்களாக உருவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இரண்டு பாகங்களையும் இயக்குனர் தற்போது முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. 


கங்குவா படத்தை முதலில் அக்டோபர் 10ம் தேதி ஆயுத பூஜை தொடர் விடுமுறையை குறி வைத்து இப்படத்தை படக்குழு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத நிலையில், அன்றைய தினமே ரஜினியின் வேட்டையன் திரைப்படமும் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கங்குவா டீம் அதிர்ச்சி அடைந்தது. அவர்களை விட சூர்யா ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.


இருப்பினும் ரஜினிக்கு மரியாதை கொடுத்து கங்குவா படத்தை வேறு நாளில் திரையிட படக் குழு திட்டமிட்டது. அதன்படி தற்போது நவம்பர் 14ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. அன்றைய தினம் பான் இந்தியா அளவில் போட்டியின்றி ரிலீஸ் ஆக உள்ளது கங்குவா திரைப்படம். ஒவ்வொரு பெரிய தமிழ்ப் படம் வெளியாகும்போதும் இது ரூ. 1000 கோடியை வசூலிக்குமா என்ற எதிர்பார்ப்பு சமீபகாலமாக உள்ளது. ஆனால் இதுவரை எந்தப் படமும் அதைச் செய்யவில்லை. ஆனால் கங்குவா அதை நிகழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காரணம், இது வட இந்தியாவில் மல்ட்பிளக்ஸ் திரையரங்குகளிலும் ஒரே நேரத்தில் ரிலீஸாகவிருப்பதால் நிச்சயம் ரூ.1000 கோடியை வசூலிக்கும் என்ற நம்பிக்கையில் படக் குழு உள்ளதாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்