பண்ணை வீட்டில் வைத்து.. கட்சித் தொண்டரிடம் பாலியல் அத்துமீறல்.. பிரஜ்வால் அண்ணன் அதிரடி கைது

Su.tha Arivalagan
Jun 23, 2024,11:56 AM IST

பெங்களூரு: மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் முன்னாள் எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா மீதான சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில் தற்போது அவரது அண்ணன் மீது, கட்சித் தொண்டரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் எழுந்து அந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


முன்னாள் பிரதமர் தேவெ கெளடாவின் மூத்த மகன்தான் ரேவண்ணா. இவர் முன்னாள் கர்நாடக மாநில அமைச்சர் ஆவார். இவரது மகன் பிரஜ்வால்  ரேவண்ணா. இவர் ஹசன் தொகுதி எம்.பியாக இருந்தவர். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலிலும் போட்டியிட்டார். ஆனால் தோற்றுப் போய் விட்டார். தேர்தல் சமயத்தில்தான் இவர் நூற்றுக்கணக்கான பெண்களிடம் மோசமாக நடந்து கொண்டதாக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாக இருந்து வந்த பிரஜ்வால் நீண்ட இழுபறிக்குப் பின்னர் நாடு திரும்பி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவரது அண்ணன் சூரஜ் பிரஜ்வால் மீது ஒரு பரபரப்பு புகார் எழுந்துள்ளது. தனது கட்சித் தொண்டர் ஒருவரிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் அவர் நடந்து கொண்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. ஜூன் 16ம் தேதி ஹசன் மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் வைத்து இப்படி நடந்து கொண்டாராம் சூரஜ் ரேவண்ணா.


இந்தப் புகாரின் பேரில் தற்போது சூரஜ் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் தன் மீதான புகாரை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தன் மீது புகார் கூறிய நபர் தன்னிடம் ரூ. 5 கோடி கேட்டதாகவும், அதை தர மறுத்ததால் இப்படி பொய்யான புகாரைக் கூறியுள்ளதாகவும் கூறியுள்ளார் சூரஜ். இதற்கிடையே சூரஜ் ரேவண்ணாவின் நண்பர் சிவக்குமார் என்பவரும் போலீஸில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் சம்பந்தப்பட்ட கட்சித் தொண்டர் தன்னிடம் ரூ. 5 கோடி கேட்டதாகவும் அதைக் கொடுக்காவிட்டால், சூரஜ் ரேவண்ணா மீது பாலியல் புகார் கொடுப்பேன் என்று மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே ரேவண்ணா மீதும் பாலியல் புகார்கள் உள்ளன. தற்போது அவரது 2 மகன்களும் அடுத்தடுத்து கைதாகியிருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.