தேர்தல் பத்திர திட்டம் அரசியல் சாசனத்திற்குப் புறம்பானது.. சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

Su.tha Arivalagan
Feb 15, 2024,08:37 PM IST

டெல்லி:   மத்திய அரசின் தேர்தல் பத்திரத் திட்டம் சட்டவிரோதமானது, அரசியல் சாசனத்திற்குப் புறம்பானது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.


வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், டாக்டர் ஜெயதாக்கூர் உள்ளிட்டோர், மத்திய அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திர திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்டிவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது. இன்று இந்த வழக்கில் ஐந்து நீதிபதிகளும் ஒரு மித்த தீர்ப்பை அளித்தனர்.


அதில், இந்த திட்டம் சட்டவிரோதமானது, அரசியல் சாசனத்திற்குப் புறம்பானது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தீர்ப்பின் முக்கிய  அம்சங்கள் வருமாறு:




இந்த வழக்கில் ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த முடிவுக்கு வந்திருக்கிறோம். எனக்கும், நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கும் இரு கருத்துக்கள் இருந்தன.  அதேசமயம், இருவரும் ஒரே முடிவையே எடுத்திருக்கிறோம். 


ஒரு திட்டம் தொடர்பான விவரங்களை அறிய பொதுமக்களுக்கு உரிமை உண்டு. தகவல் அறியும் உரிமை சட்டமானது, மாநில  விவகாரங்களுக்கு மட்டுமல்ல, அனைத்துத் திட்டங்களுக்குமே பொருந்தும். அந்த வகையில் இந்த தேர்தல் பத்திர திட்டம் குறித்த விவரத்தையும் அறிய பொதுமக்களுக்கு உரிமை உண்டு.


அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நிதி, நிதி அளிப்போர் குறித்த விவரத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ள உரிமை உண்டு. அது வாக்காளர்களின் உரிமையாகும். அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்போர், அரசின் கொள்கை வகுப்பில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு. பண பலத்தால் வாக்குகளின் போக்கையும் மாற்ற வாய்ப்புண்டு.


தேர்தல் பத்திர திட்டமானது அரசியல் சாசத்திற்கு விரோதமானது, தகவல் அறியும் சட்டத்திற்குப் புறம்பானது. கருப்புப் பணத்தை ஒழிக்க இந்தத் திட்டம் உதவும் என்று சொல்ல முடியாது. அதற்கு வேறு பல வழிகள் உள்ளன. கருப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறிக் கொண்டு, தேர்தல் பத்திரத் திட்டத்தை நியாயப்படுத்த முடியாது. மக்களுக்குத் தெரியாமல் எந்தத் திட்டமும் இருக்க முடியாது.


தேர்தல் பத்திரத் திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சட்டத் திருத்தங்கள் அரசியல் சாசனத்திற்குப் புறம்பானவை.


தேர்தல் பத்திரங்களை வெளியிடும் வங்கிகள் உடனடியாக அதை நிறுத்த வேண்டும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இதுவரை பெற்ற நிதிப் பங்களிப்பு குறித்த விவரத்தை வெளியிட வேண்டும். எவ்வளவு பணம் பெறப்பட்டது. யார் கொடுத்தார்கள் என்ற விவரத்தை வெளியிட வேண்டும். எந்தக் கட்சிக்குப் பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரமும் வெளியிட வேண்டும்.  தேர்தல் ஆணையத்திற்கு இந்த விவரங்களை ஸ்டேட் வங்கி  அளிக்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம்,  மார்ச் 31ம் தேதிக்குள் இந்த விவரத்தை  பொதுமக்களுக்குத் தனது இணையதளம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.


தேர்தல் பத்திரத் திட்டம் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பத்திரத் திட்டம் மூலம் பாஜகவுக்குத்தான் மிகப் பெரிய அளவில் நிதி கிடைத்தது என்று புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.