"சட்டசபைநிறைவேற்றிய மசோதாவை எப்படி தடுக்க முடியும்?".. பஞ்சாப் ஆளுநருக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

Su.tha Arivalagan
Nov 24, 2023,01:29 PM IST

டெல்லி:  சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் எப்படி நிறுத்தி வைக்க முடியும். இவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கூடி நிறைவேற்றிய  மசோதாக்கள். இதை நிறுத்தி வைக்க உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது. இது மிகவும் கவலை அளிக்கிறது என்று பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


சுப்ரீம் கோர்ட்டில் கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மாநில ஆளுநர்களுக்கு எதிராக அந்தந்த மாநில அரசுகள் சார்பில் முக்கியமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட் அடுத்தடுத்து விசாரித்து வருகிறது.


இந்த நிலையில், பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக அந்த மாநில ஆம் ஆத்மி அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது.  தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பர்டிவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:




பஞ்சாப் மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 4 மசோதாக்களுக்கு  ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதாக மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதுதவிர மேலும் 3 மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது புகாராகும்.


இந்த மசோதாக்கள் மீதான முடிவு குறித்து வருகிற வெள்ளிக்கிழமைக்குள் ஆளுநர் தனது முடிவை அறிவிக்க வேண்டும். கோர்ட்டுக்கு வழக்கு வந்து, அதில் உத்தரவு பிறப்பிக்கும் வரை ஆளுநர்கள் காத்திருக்கக் கூடாது.  அரசியல் சாசனச் சட்டம் 200ன் படி ஆளுநருக்கு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒன்று ஒப்புதல் தர வேண்டும்.. இல்லாவிட்டால் மறுபரிசீலனை செய்யக் கோரி சட்டசபைக்கே திருப்பி அனுப்ப வேண்டும். அதன் பின்னர், அந்த மசோதாவை  திருத்தம் செய்தோ அல்லது திருத்தப்படாமலோ சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


ஒரு மசோதாவை திருப்பி அனுப்பாமல், ஒப்புதல் தராமலும் நிலுவையில் வைத்திருப்பதன் மூலம் அந்த மசோதாவை அடுத்த கட்டத்துக்கு நகர விடாமல் தடுக்க ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை. ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள்.  ஜனநாயக நடைமுறையை தங்களது செயல்களால் முடக்கும் அதிகாரம் ஆளுநர்களுக்கு இல்லை. இப்படிச் செய்வது அரசியல் சாசனத்தின் அடிப்படையைத் தகர்க்கும் செயலாகும்.


அரசியல் சாசனத்தில் ஆளுநர் என்பவர் அலங்கார தலைவர்தான். உண்மையான அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்ககப்பட்ட பிரதிநிதிகளிடம்தான் உள்ளது. ஆளுநர்களுக்கு சில அதிகாரங்கள் உள்ளன. ஆனால் அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பூர்வமான பணிகளைச் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரநிதிகளின் பணிகளை பாதிக்கும் அளவுக்கு இருக்கக் கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடமே சட்டரீதியான அதிகாரம் உள்ளது. 


மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவோர்தான் ஒரு சட்டத்தை இயற்றும் சக்தி படைத்தவர்கள். அது தேவையா இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரமும் அவர்களுக்கே உண்டு. ஆளுநர் என்பவர் ஒரு நியமனத் தலைவர் அவ்வளவே என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.