ஜாமீன் நீட்டிப்பு கோரிக்கை.. கெஜ்ரிவால் மனுவை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்த உச்சநீதிமன்றம்

Meenakshi
May 28, 2024,05:37 PM IST

டெல்லி:  இடைக்கால ஜாமீனை  நீட்டிக்கக் கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை உரிய முடிவுக்காக தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தது உச்சநீதிமன்ற விடுமுறை கால பெஞ்ச்.


டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் தெலுங்கானா எம்.எல்.சி.யான கவிதாவும் கைது செய்யப்பட்டார். இவர்களைத் தொடர்ந்து,  டெல்லி முதல்வர் அரவிந்த்  கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், டெல்லி முதல்வர் ஜாமீன் குறித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.


அவரது ஜாமீன் மனு மீதான  விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.  இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும்  திபாங்கர் தத்தா அமர்வு  விசாரித்தது. மே 10ம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 21 நாள் ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் ஜூன் 2ம் தேதி விசாரணைக்கு சரணடைய வேண்டும் என்று தெரிவித்தது. கெஜ்ரிவாலின் ஜாமீனும் முடிவடைய உள்ள நிலையில், மருத்துவ காரணங்களுக்காக மேலும் ஏழு நாட்களுக்கு ஜாமீனை நீட்டிக்க  கோரி கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார்.




இது தொடர்பாக  செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், ஒரு மாதத்தில் 7 கிலோ குறைந்துள்ளேன். எந்த காரணமும் இன்றி 7 கிலோ குறைந்துள்ளதால், இது மருத்துவ பிரச்சனையாகத்தான் இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். முக்கிய மருத்துவ பரிசோதனை செய்ய சொல்லி இருக்கின்றனர். இதைச் செய்வதற்கு 7 நாட்கள் வரை தேவைப்படும். அதனால் ஜாமீனை நீட்டிக்க உச்ச நீதிமன்றத்திடம் கோரியுள்ளோம் என்று தெரிவித்தார்.


இந்நிலையில, இன்று கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ஜாமீனை நீட்டிக்க கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதை விசாரித்த விடுமுறை கால பெஞ்ச் நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் விஸ்வநாதன் கூறுகையில், கெஜ்ரிவால் வழக்கு மே 17ம் தேதி விசாரிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது. தகுந்த உத்தரவுக்காக தலைமை நீதிபதிக்கு இது அனுப்பி வைக்கப்படுவதாக கூறினர். இதனால் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் நீடிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.