தேர்தல் பாண்டுகள்: முழு டேட்டாவை ஏன் வெளியிடவில்லை..  எஸ்.பி.ஐக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

Su.tha Arivalagan
Mar 15, 2024,07:51 PM IST

டெல்லி:  தேர்தல் பாண்டுகள் தொடர்பாக அனைத்து விவரங்களையும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிட வேண்டும். தேர்தல் பாண்டுகளின் எண்ணையும் வெளியிட வேண்டும். இதுதொடர்பாக 12ம் தேதியே உத்தரவிட்டும் ஏன் வழங்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.


தேர்தல் பாண்டுகள் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் கபில் சிபல் சில முறையீடுகளை வைத்தார். அதில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வழங்கியுள்ள தேர்தல் பாண்டுகள் விவரங்கள் முழுமையாக இல்லை. குறிப்பாக பத்திரங்களின் எண்களை அவர்கள் வழங்கவில்லை. இதனால் யாருக்கு எவ்வளவு பணம் போனது என்பதை அறிய முடியில்லை என்றார்.




இதையடுத்து தலைமை நீதிபதி சந்திரசூட் குறுக்கிட்டு, மார்ச் 12ம் தேதிய முழு விவரங்களையும் வெளியிடுமாறு உத்தரவிட்டோமே.. பிறகு ஏன் வழங்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். முழு விவரங்களையும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் பாண்டுகளின் எண்களையும் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.


இந்த விசாரணையின்போது ஸ்டேட் வங்கி சார்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதைக் குறிப்பிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உச்சநீதிமன்றம் ஸ்டேட் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பி அவர்களது வழக்கறிஞரை ஆஜராகச் சொல்ல வேண்டும். அவர்களது தரப்பில் சொல்ல வேண்டியதை இங்கு சொல்ல வாய்ப்பு கிடைக்கும். அவர்களும் இங்கு இருக்க வேண்டியது அவசியம். நான் ஸ்டேட் வங்கி சார்பில் ஆஜராகவில்லை என்றார். அதைக் கேட்ட பின்னர் ஸ்டேட் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பி அவர்களது தரப்பு ஆஜராக தலைமை நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணை பின்னர் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. 


முன்னதாக ஸ்டேட் வங்கி சமர்ப்பித்த விவரங்களை நேற்று தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது. அதில் தேர்தல் பத்திரங்களை வாங்கியது யார், எவ்வளவு கொடுத்தனர், கட்சிகளுக்குக் கிடைத்த பணம் எவ்வளவு என்ற விவரம் தனித் தனியாக இடம் பெற்றிருந்தது. அதேசமயம் எந்த கட்சிக்கு யார் எவ்வளவு கொடுத்தனர் என்ற ஒப்பீடு விவரம் அதில் இடம் பெறவில்லை. தேர்தல் பத்திரங்களின் எண்களும் அதில் இடம் பெறவில்லை. இதனால் யாருக்கு யார் பணம் கொடுத்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை.


தேர்தல் பத்திரங்களின் எண்கள் தெரிவிக்கப்பட்டால், யாருக்கு யார் பணம் கொடுத்தார்கள் என்பது ஈஸியாக தெரிந்து விடும். இதனால் தேசிய அரசியலில் மேலும் பரபரப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டிலேயே அதிக அளவாக லாட்டரி கிங் மார்ட்டின்தான் ரூ. 1368 கோடி அளவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நிதியுதவி அளித்துள்ளார். இவரது நிறுவனங்களில்தான் அதிக அளவிலான அமலாக்கத்துறை ரெய்டு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


கட்சிகள் வரிசையில் பார்த்தால் பாஜக தான் அதிக அளவிலான பணத்தை நன்கொடையாக பாண்டுகள் மூலம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக தவிர்த்து திரினமூல் காங்கிரஸ், பாரத் ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் 1000 கோடிக்கு மேலான அளவுக்கு நிதியைப் பெற்றுள்ளன என்பது முக்கியமானது.