மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்த மதுரை ஹைகோர்ட் பெஞ்ச் உத்தரவு ரத்து.. சுப்ரீம் கோர்ட்!
டெல்லி: யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை ரத்து செய்த பிறப்பித்த உத்தரவு அவசர கதியில் பிறப்பிக்கப்பட்டது என்று கூறி அந்த உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு முப்படைகளின் கூட்டுத் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானதில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாரிதாஸ் தனது யூடிபில் ஒரு வீடியோ போட்டிருந்தார். அதில் திமுக ஆட்சியில் தமிழ்நாடு காஷ்மீர் போல மாறி வருகிறது. தமிழ்நாட்டில் எந்த வகையான சதித் திட்டத்தையும் தீட்ட முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளதாக கூறியிருந்தார். இதையடுத்து திமுகவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், தமிழக அரசு குறித்து அவதூறாகவும், பொய்யான தகவலைக் கூறியும் மாரிதாஸ் வீடியோ போட்டுள்ளதாக கூறி சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து மாரிதாஸை கைது செய்த போலீஸார் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் தனது கைதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார் மாரிதாஸ். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், மாரிதாஸ் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தும், கைது செய்தது செல்லாது என்றும் கூறி விடுதலை செய்ய உத்தரவிட்டார். இந்த விடுதலையை எதிர்த்து தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் ஹெக்டே, இன்று மாரிதாஸை விடுவித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவை ரத்து செய்து அதிரடி தீர்ப்பளித்தார். மாரிதாஸை விசாரணை செய்யக் கூட காவல்துறைக்கு அவகாசம் வழங்காமல் மதுரை உயர்நீதிமன்றக் கிளை அவசர கதியில் உத்தரவிட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பைத் தொடர்ந்து மாரிதாஸ் மீண்டும் கைது செய்யப்படக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.