சீமானுக்கு எதிரான வழக்கு... இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.. உச்ச நீதிமன்றம்!

Manjula Devi
Mar 03, 2025,06:52 PM IST

சென்னை: சீமானுக்கு எதிராக நடிகை கொடுத்த வழக்கு மீதான விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை கொடுத்த  வழக்கு, சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு மீதான விசாரணைக்காக கடந்த 27 ஆம் தேதி சீமான் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க கால அவகாசம் கேட்டிருந்தனர்.


இதனை தொடர்ந்து மேலும் ஒரு சம்மன் சீமான் வீட்டில் ஒட்டப்பட்டு ஆஜராக காவல்துறை கூறியிருந்தது. ஆனால் காவல்துறை ஒட்டிய சில மணி நேரங்களிலேயே சம்மன் கிழிக்கப்பட்டதால் சீமான் வீட்டு காவலருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் கைலப்பாகியது. இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் பரப்பரப்பை ஏற்படுத்தியதுடன் விவாத பொருளாகவும் மாறியது. 



இந்த வழக்கு சூடுபிடிக்க தொடங்கிய நிலையில், சீமான் இந்த வழக்கில் ஆஜரானார். அப்போது சீமானிடம் 50 கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென சீமான் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதே சமயத்தில் இந்த வழக்கு விசாரணையை 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அடுத்து, மேல் முறையீடு செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார்.


உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த  வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.      நீதிபதிகள் பி.பி. நாகரத்தினா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விவகாரத்தில் இருதரப்பு வாதத்தையும் கலந்து ஆலோசித்த பிறகு உடன்பாடு காண அறிவுறுத்தப்பட்டது. பின்னர் 12 வாரத்தில் விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.