25 வருடமாக பிரிந்து வாழ்ந்த தம்பதி.. "என்ன கொடுமை இது".. ஷாக் ஆன சுப்ரீம் கோர்ட்!

Su.tha Arivalagan
Apr 28, 2023,09:40 AM IST
டெல்லி: 25 வருடமாக பிரிந்து வாழ்ந்து விட்டு விவாகரத்து கோரிய தம்பதியிடம், மிகப் பெரிய கொடுமையான வாழ்க்கையை வாழ்ந்துள்ளீர்கள் என்று கூறி அவர்களுக்கு விவாகரத்தும்அளித்துள்ளது சுப்ரீம் கோர்ட்.

இந்தத் தம்பதி திருமணமாகி 4 வருடங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்துள்ளனர். மீதம் உள்ள 25 வருடத்தையும் பிரிந்தே கழித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியைச் சேர்ந்த இந்தத் தம்பதிக்கு 1994ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணமானதும் அந்தப் பெண் கர்ப்பமடைந்துள்ளார்.  ஆனால் கணவருக்குச் சொல்லாமல் அதை அபார்ஷன் செய்து விட்டார். மேலும் கணவர் வீட்டாருடனும் சின்னச் சின்னதாக சண்டை வந்துள்ளது.  நான்கு வருட வாழ்க்கைக்குப் பின்னர் கணவர் வீட்டை விட்டு வெளியேறிய அவர் வரதட்சணை கொடுமை உள்ளிட்ட புகார்களைக் கூறி போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கணவரும், அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தனர்.



அதன் பின்னர் கணவர் விவாகரத்து கோரி கோர்ட்டை நாடினார். கீழ் கோர்ட்டில் விவாகரத்து அளிப்பதாக தீர்ப்பானது. ஆனால் அதை எதிர்த்து மனைவி ஹைகோர்ட்டுக்குப் போனார். அங்கு விவாகரத்து, ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து கணவர் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுபான்ஷு துலியா மற்றும் ஜேபி பர்டிவாலா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்து திருமணச் சட்டத்தின்படி இந்தத் திருமணத்தை கொடூரம் என்றுதான் சொல்ல முடியும். இருவருக்கும் இடையிலான அனைத்து வகையான பந்தங்களும் இங்கு இல்லாமல் போயுள்ளன. மிகப் பெரிய கசப்புணர்வு மட்டுமே மிஞ்சியுள்ளது.

4 வருடம் மட்டுமே சேர்ந்து வாழ்ந்துள்ளனர். 25 வருடம் பிரிந்து வாழ்ந்துள்ளனர். இருவருக்கும் குழந்தைப் பேறும் இல்லை. பழுது பார்க்க முடியாத அளவுக்கு இருவரின்  திருமண பந்தமும் சேதமடைந்து போய் விட்டது. இந்தத் திருமண பந்தம் முடிவுக்கு வர வேண்டும். இது மேலும் தொடர்ந்தால்,  இந்தக் கொடுமையை அனைவரும் அங்கீகரிப்பது போலாகி விடும். 

கணவர் மாதம் ரூ. 1 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கிறார். எனவே அவர் மனைவிக்கு அடுத்த நான்கு வாரத்திற்குள் ரூ. 30 லட்சம் ஜீவனாம்சமாக தர வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்து விவாகரத்து வழங்கி உத்தரவிட்டனர்.