அமைச்சர் பதவிக்கு ஆபத்தில்லை.. ஆனால் ஜாமீன் கிடைக்க மாட்டேங்குதே.. தவிப்பில் செந்தில் பாலாஜி

Su.tha Arivalagan
Jan 05, 2024,04:34 PM IST

டெல்லி: அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி. நடவடிக்கை செல்லாது. அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் முதல்வரிடம் மட்டுமே உள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியே என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


இதனால் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவிக்கு இப்போது எந்த ஆபத்தும் இல்லை. அதேசமயம், அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் தொடர்ந்து சிறைவாசத்திலேயே இருந்து வருகிறார். இது அவரையும், அவரது குடும்பத்தினரையும், திமுக தலைமையையும் தொடர்ந்து கவலைக்குள்ளாக்கி வருகிறது.


நேற்றுதான் செந்தில் பாலாஜிக்கு 14வது முறையாக சென்னை செஷன்ஸ் கோர்ட் சிறைக் காவல் நீட்டிப்புக்கு உத்தரவிட்டது என்பது நினைவிருக்கலாம்.




அமலாக்கத்துறையால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டவர் செந்தில் பாலாஜி. அப்போது அவர் மது விலக்குத்துறை அமைச்சராக இருந்து வந்தார். கைதுக்குப் பின்னர் அவருக்கு இருதய ஆபேரஷன் நடத்தப்பட்டது. இந்த நிலையில் அதிரடியாக  அவரை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


காரணம், ஆளுநரால் ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால் ஆளுநரின் நடவடிக்கை வியப்பை ஏற்படுத்தியது. ஆனால் அன்றே தனது உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் மாளிகையிலிருந்து விளக்கம் வந்தது. 


இந்த நிலையில் ஆளுநர் தனது உத்தரவை நிறுத்தி வைத்ததற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட், முதல்வரிடம்தான் அமைச்சரை சேர்ப்பதற்கும் நீக்குவதற்கும் அதிகாரம் உள்ளது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து மனுதாரர், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அங்கு இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.


முதல்வர்தான் இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தவர். அவர்தான் செந்தில் பாலாஜி நீடிக்க வேண்டுமா அல்லது நீக்கப்பட வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் சரியான தீர்ப்பையே அளித்துள்ளது. அதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.


செந்தில் பாலாஜியின் பதவிக்கு சுப்ரீம் கோர்ட் நிவாரணம் அளித்து விட்டது. ஆனால் அவருக்கு ஜாமீன்தான் கிடைக்காமல் இழுபறியாக உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டா். அது முதல் அவர் சிறைவாசத்திலேயே இருக்கிறார். பலமுறை ஜாமீன் கோரியும் கூட அவருக்குக் கிடைக்கவில்லை. சுப்ரீம் கோர்ட் வரை போய் பார்த்தும் ஜாமீன் கிடைக்கவில்லை. 14வது முறையாக சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளார் செந்தில் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.


திமுக அமைச்சரவையில் தற்போது இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார் செந்தில் பாலாஜி.