முகேஷ் அம்பானிக்கும், குடும்பத்துக்கும் "Z+" பாதுகாப்பு.. சொந்த செலவில்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Su.tha Arivalagan
Mar 01, 2023,12:50 PM IST

டெல்லி: ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானிக்கும், அவரது மொத்தக் குடும்பத்துக்கும் அவர்களது சொந்த செலவில் இசட் பிளஸ் பாதுகாப்பு தரலாம்  என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி. உலக அளவில் மிக முக்கியமான கோடீஸ்வரராகவும் இருக்கிறார். போர்ப்ஸ் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார். அவருக்கு மத்திய அரசு சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிகாஷ் சாஹா என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனு தாக்கல் செய்தார்.


ஸ்டாலின் வெட்டிய "கேக்"... துரைமுருகன் மைன்ட் வாய்ஸ் என்னவா இருக்கும் ?!


அதில், 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி சுப்ரீம் கோர்ட் வெளியிட்ட ஒரு உத்தரவில், முகேஷ் அம்பானிக்கு பாதுகாப்பு கொடுக்கப்படுவது குறித்து விளக்கம் தேவை என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ண முராரி, அசானுதீன் அமனுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தால் நிச்சயம் மத்திய பாதுகாப்பு தரப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட பகுதி ,இடம் என்றில்லாமல் அவர்கள் எங்கு போனாலும் அந்தப் பாதுகாப்பைத் தர வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் கருத்து.


முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்தியாவில் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது மகாராஷ்டிர மாநில அரசு மற்றும் மத்திய உள்துறையின் பொறுப்பாகும். அதேபோல அவர்கள் வெளிநாடு சென்றால் அங்கும் இதே பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.  உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் அளிக்கப்படும் இந்த இசட் பிரிவு பாதுகாப்புக்கான மொத்த செலவுகளையும் முகேஷ் அம்பானியிடமிருந்தே வசூலிக்க வேண்டும்.


இந்த உத்தரவின்படி முகேஷ் அம்பானி, அவரது மனைவி, அவர்களது குழந்தைகளுக்கு மத்திய அரசு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும்.