எப்போது கிடைக்கும் ஜாமீன்... செந்தில் பாலாஜி வழக்கு ... மீண்டும் ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

Meenakshi
May 06, 2024,02:13 PM IST

டெல்லி: ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மே 15ம் தேதிக்கு தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம்.


பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குப் பின்னர் இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து உடல் நிலை  காரணம் காட்டி அடுத்தடுத்து ஐந்து முறை ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மனு செய்தார். ஆனால் ஐந்து முறையும் அது நிராகரிக்கப்பட்டது. 




இந்த நிலையில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தார் செந்தில் பாலாஜி. இந்த மனு மீது பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த பதில் மனுவை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை. கடந்த முறை நீதிபதி அபய் ஓஹா தலைமையிலான அமர்வு முன்பு மனு விசாரணைக்கு வந்தபோது, இதை செந்தில் பாலாஜி தரப்பு சுட்டிக் காட்டி, வழக்கு விசாரணையை வேண்டும் என்றே தாமதப்படுத்துகிறது அமலாக்கத்துறை என்று வாதிடப்பட்டது.


இதையடுத்து பதில் மனு தாமதத்திற்கு அமலாக்கத்துறை மன்னிப்பு கோரியது. மேலும், செந்தில் பாலாஜி விசாரணையின் போது முறையாக ஒத்துழைக்கவில்லை. செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக இருப்பதாலும், இவரை விடுவித்தால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளதாலும் இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கதுறையின் சார்பில் வாதிடப்பட்டது. 


அமலாக்கத்துறையின் வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் மே 6ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பான வாதங்களை முன் வைக்க மேலும் 5 நாட்கள் அவகாசம் வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்து. அமலாக்கத்துறைக்கு அவகாசம் வழங்கக் கூடாது என செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. செந்தில் பாலாஜி 320 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது. 


இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அபய் எஸ்.உஜ்ஜல் புயன் அடங்கிய அமர்வு செந்தில் பாலாஜியின்  ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகின்ற 15ம் தேதிக்கு ஒத்திவைத்தது.