இமயமலையில் ரஜினிகாந்த்.. பக்திப் பரவசத்துடன் பத்ரிநாத், கேதார்நாத்தில் வழிபாடு.. !

Meenakshi
Jun 01, 2024,02:31 PM IST

டேராடூன்: இமயமலைக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக சுற்றுப்பயணம் சென்றுள்ளார். கேதார்நாத் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பத்ரிநாத்துக்கும் அவர் போயுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


நடிகர் ரஜினிகாந்த் ஒவ்வொரு வருடமும் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு ஆன்மீக சுற்றுலா செல்வதை வழக்கமாக பின்பற்றி வருகிறார். கொரோனா காலத்தில் மட்டும் தான் செல்லாமல் இருந்தார். அதன் பின்னர் ஒவ்வொரு படமும் முடிந்தவுடன் இமயமலை சென்று வருகிறார். அப்படித்தான் தற்பொழுது இமயமலை சென்றுள்ளார்.




ரஜினிகாந்த் நடித்து வரும் 170வது படம் வேட்டையன். இந்த படத்தை ஜெய் பீம் படத்தை  இயக்கிய இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், படப்பிடிப்பு தற்பொழுது முடிந்துள்ள நிலையில், ஓய்வுக்காக ரஜினிகாந்த் அபுதாபி சென்றார். சுமார் 2 வார கால ஓய்வுக்கு பிறகு மீண்டும் கடந்த 28ம் தேதி சென்னை திரும்பினார். கடந்த 29ம் தேதி அவர் தனது நண்பர்களுடன் இமயமலை சென்றுள்ளார்.




சென்னையில் இருந்து விமானம் மூலம் டேராடூன் சென்றார். அங்கிருந்து ரிஷிகேஷ் சென்றார். அங்கு சுவாமி தயானந்த சரஸ்வதி ஆஸ்ரமத்துக்குச் சென்று வழிபாடு செய்தார். பின்னர், அங்கிருந்து பத்ரிநாத் சென்றார். அதனை தொடர்ந்து கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்றார். 


அங்கு  எடுத்த ரஜினியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்பொழுது இணைத்தில் வைராகி வருகிறது. ஜூன் 3 அல்லது 4ம் தேதி சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை திரும்பும் ரஜினிகாந்த் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க உள்ளார். இதனை சன்பிக்சர்ஸ் தயாரிக்கிறது.அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தில் சத்யராஜ், ரஜினியின் நண்பராக நடிக்கிறார்.