ஜிகர்தண்டா xx.. "இந்நாளின் திரை உலக நடிகவேள்".. எஸ்.ஜே.சூர்யாவுக்கு ரஜினிகாந்த் புகழாரம்!

Su.tha Arivalagan
Nov 14, 2023,07:10 PM IST

சென்னை: ஜிகர்தண்டா xx படம் ஒரு குறிஞ்சி மலர் என்று கூறியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவையும் பாராட்டியுள்ளார். எஸ்.ஜே. சூர்யா, இந்நாளின் திரை உலக நடிகவேள் என்ற புதிய பட்டத்தையும் கொடுத்து அசத்தியுள்ளார்.


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டாவின் 2ம் பாகம் இப்போது "ஜிகர்தண்டா xx" என்ற பெயரில் வெளியாகி வசூலில் பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ளது. முதல் படம் போலவே இந்தப் படமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.




தீபாவளிக்கு திரைக்கு வந்த ஜப்பான் படம் வசூலில் சோபிக்கத் தவறியதைத் தொடர்ந்து அந்த இடத்தை "ஜிகர்தண்டா xx" பிடித்துக் கொண்டு வசூல் வேட்டையாடி வருகிறது. படத்துக்கும் பாசிட்டிவ் விமர்சனங்களே அதிகம் வந்து கொண்டுள்ளன.


இந்த நிலையில் இப்படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த். இதுதொடர்பாக அவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


ஜிகர்தண்டா xx படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு. வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள். லாரன்ஸால இப்படியும் நடிக்க முடியுமா என்ற பிரம்மிப்பை நமக்கு உண்டாக்குகிறது. எஸ் ஜே சூர்யா இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லத்தனம், நகைச்சுவை, குனச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தி இருக்கிறார்.




திருவோட கேமிரா விளையாடி இருக்கிறத கலை இயக்குனரின் உழைப்பு பாராட்டிற்குரியது.. திலீப் சுப்புராயனின் சண்டைக்காட்சிகள் அபாரம். சந்தோஷ் நாராயணன் வித்தியாசமான படங்களுக்கு வித்தியாசமான இசை அமைப்பதில் மன்னர். இசையால் இந்த படத்திற்கு உயிரூட்டி தான் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என்பதை இந்த படத்தில் நிரூபித்து இருக்கிறார். 


இந்த படத்தை இவ்வளவு பிரமாண்டமாக எடுத்து இருக்கும் தயாரிப்பாளருக்கு என்னுடைய தனி பாராட்டுக்கள். படத்தில் வரும் பழங்குடிகள் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்கள். நடிகர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு யானைகளும் இருக்கின்றன. செட்டானியாக நடித்திருக்கும் விது அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் அற்புதம். 


இந்த படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மக்களை கைதட்ட வைக்கிறார், பிரமிக்க வைக்கிறார், சிந்திக்க வைக்கிறார், அழவும் வைக்கிறார். I am proud of you கார்த்திக் சுப்புராஜ். my hearty congratulations to கார்த்திக் சுப்புராஜ் and team என்று கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.