சின்னப்புள்ளத்தனமா இருக்கே.. டேவிட் வார்னரை "பிளாக்" செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

Su.tha Arivalagan
Dec 20, 2023,05:06 PM IST

டெல்லி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்தவரும், அந்த அணிக்கு ஐபிஎல் கோப்பையை வாங்கித் தந்தவருமான டேவிட் வார்னரை, அந்த அணியின் சமூக வலைதளங்கள் பிளாக் செய்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வார்னர்  அதிரடியான ஓபனிங் பேட்ஸ்மேன் ஆவார். ஐபிஎல் போட்டிகளிலும் இவர் வெற்றிகரமான வீரராக வலம் வந்துள்ளார். கிட்டத்தட்ட 6000 ரன்களை அவர் குவித்துள்ளார். 3 தொடர்களில் அதிக ரன்கள் குவித்ததற்காக ஆரஞ்சு கேப் வாங்கிய பெருமைக்கும் உரியவர்.




ஆரம்பத்தில் வார்னர், டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் விளையாடி வந்தார். பின்னர் 2014ம் ஆண்டு அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மாறினார். அந்த அணியின் கேப்டனாக 2015ம் ஆண்டு நியமிக்கப்பட்டு, 2019ம் ஆண்டு வரை அவர் செயல்பட்டார்.


சன்ரைசர்ஸ் அணியில் வெற்றிகரமான கேப்டனாக, வீரராக அவர் திகழ்ந்துள்ளார். அந்த அணி 2016ம் ஆண்டு கோப்பையை வென்றது. அதற்கு வார்னரின் அட்டகாசமான பேட்டிங் மற்றும் கேப்டன்சியே காரணம்.  இறுதிப் போட்டியில்  வார்னர், 38 பந்துகளில் 69 ரன்களைக் குவித்து அதிரடி காட்டினார். அந்த சீசனில் வார்னர் 848 ரன்களைக் குவித்திருந்தார்.


2018 சீசனின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பான சர்ச்சையில் சிக்கினார் வார்னர். இதையடுத்து அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட பிசிசிஐ தடை விதித்தது.  2019ல் மீண்டும் சன்ரைசர்ஸ் அணியில் இணைந்தார் வார்னர். அந்தத் தொடரிலும் வார்னர் அசத்தலாக ஆடினார். 


எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருந்த நிலையில் 2021ல் வார்னரிடமிருந்து கேப்டன் பொறுப்பு  பறிக்கப்பட்டது.  அந்தத் தொடரில் சன்ரைசர்ஸ் அணி சரியாக ஆடவில்லை. வார்னரும் கூட 2வது பாதியில் விளையாட வாய்ப்பு மறுக்கப்பட்டார். இதற்கு கிரிக்கெட் காரணம் இல்லை என்று அந்த அணியின் உதவி பயிற்சியாளராக இருந்தவரான பிராட் ஹாடின் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 




2022 தொடரின்போது வார்னரை அணியிலிருந்து விடுவித்து விட்டது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இதனால் அவர் மீண்டும் டெல்லிக்குத் திரும்பினார்.  அந்தத் தொடரில் டெல்லி அணியிலேயே அதிக ரன்கள் குவித்த வீரராக வார்னர் உருவெடுத்தார். 2023 தொடரில் ரிஷப் பந்த் காயமடைந்திருந்த காரணத்தால் வார்னர் கேப்டனாக செயல்பட்டார். இந்த ஆண்டும் அவர்தான் டாப் ஸ்கோரராக உருவெடுத்தார் என்பது நினைவிருக்கலாம்.


இந்த நிலையில்தான் இன்று ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தை சந்தித்தார் வார்னர். அதாவது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி,  பாட் கமின்ஸை ரூ. 20.50 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதையடுத்து பாட் கமின்ஸை பாராட்டுவதற்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் ஹேன்டில்களை அவர் டேக் செய்து மெசேஜ் போட முயன்றார். ஆனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை  பிளாக் செய்து வைத்திருந்தது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார். இதை தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார் டேவிட் வார்னர்.


வார்னரை ஏன் சன்ரைசர்ஸ் அணி பிளாக் செய்துள்ளது என்று தெரியவில்லை. எந்த ஒரு ஐபிஎல் அணியும் இதுபோல நடந்து கொண்டதாக இதுவரை தகவல் இல்லை. அப்படி இருக்கையில் சன் ரைசர்ஸ் அணியின் இந்த செயல் பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.