Sunday Message: சிறுமையை நினைக்கும் கர்த்தர்!

Su.tha Arivalagan
Apr 02, 2023,10:37 AM IST
- கோல்டுவின் ஆசிர்

"செத்தவனைப் போல எல்லோராலும் முழுவதும் மறக்கப்பட்டேன். உடைந்த பாத்திரத்தை போலானேன்"

சங்கீதம் 31:12

ஓர் ஊரின் ஒதுக்குப்புறமாக குளம் ஒன்று இருந்தது. சமீபத்தில் பெய்த மழையில் குளத்தில் ஏராளமான தாமரைப் பூக்கள் பூத்திருந்தன. ஆனால் அந்த ஊர் ஜனங்கள் குளத்தின் அருகில் கூட வருவதில்லை. அந்த குளம் மக்களால் முழுவதும் மறக்கப்பட்ட குளமாக இருந்தது. அந்த வழியாக வந்த ஒரு புகைப்பட கலைஞர் அந்த குளத்தை ரசித்து நிறைய புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். மேலும் அங்கு உள்ள தாமரைப் பூக்களையும் பறித்துக் கொண்டு ஊருக்குள் வந்தார். அந்த புகைப்படத்தையும் பூக்களையும் பார்த்த ஊர் மக்கள் இவ்வளவு நாள் இந்த அழகான குளத்தை மறந்துவிட்டோமே என்று வருந்தினர். அந்த புகைப்படக் கலைஞரோ தான் எடுத்த அத்தனை புகைப்படங்களையும் வலைத்தளத்தில் பதிவிட்டு உலகம் அறிய செய்தார். அவ்வளவு நாள் மறக்கப்பட்ட குளமானது ஒரே நாளில் உலகப்புகழ் பெற்றது. 




நம்மில் கூட பலரும் சொந்தம், உறவினர்கள், நண்பர்கள் என்று எல்லாராலும் மறக்கப்பட்டு இருக்கலாம். ஏசாயா 49:15 யில் ஸ்திரியானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல் தன் பாலகனை மறப்பாளோ. அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார். வேதாகமத்தில் யாக்கோபு லேயாளை விட ராகேலை அதிகம் விரும்பினார். லேயாள் அற்பமாக என்னப் பட்டாள். தன்னை கணவன் நேசிக்காததால் மிகவும் வியாகுலப்பட்டாள். ஆனால் எந்த வித எதிர் நடவடிக்கைகளும் எடுத்ததாக தெரியவில்லை. கர்த்தர் லேயாளைக் கண்டார். அவள் கர்ப்பத்தை ஆசீர்வதித்து பிள்ளைகளை கொடுத்தார். அவளது வம்சத்தில் தான் மேசியா வந்து பிறந்தார். ராகேல் அல்ல லேயாளே ஆபிரகாமின் கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டாள். 

இன்றைக்கும் கணவனால் அற்பமாக என்னப்படும் மனைவியர் உண்டு, உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அற்பமாக என்னப்படும் மனிதர்களும் உண்டு, வேலையிடங்களில் புறக்கணிக்கப்படுபவர்கள் உண்டு. கலங்காமல் கர்த்தர் மேல் நம்பிக்கையாய் இருப்பவர்கள் மேல் நிச்சயம் ஆறுதல் உண்டாகும். பொறுமையாய் இருப்பவர்களின் ஆசீர்வாதம் கர்த்தரிடத்தில் இருந்து வருவதனால் பெரிதாய் இருக்கும்.