Gangers: சுந்தர்.சியுடன் மீண்டும் கூட்டணி.. சூப்பரப்பு.. ஆனால் வடிவேலு பழைய பார்முல இருப்பாரா?

Su.tha Arivalagan
Sep 12, 2024,05:11 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் எப்போதும் வெற்றிக் கூட்டணியாக பார்க்கப்படுவது வைகைப் புயல் வடிவேலு  நடிக்கும் அத்தனை படங்களும்தான். அப்படிப்பட்ட வெற்றிக் கூட்டணிகளில் ஒன்றுதான் வடிவேலு - சுந்தர் சி. இப்போது அந்தக் கூட்டணி கிட்டத்தட்ட 15 வருடத்திற்குப் பிறகு மீண்டும் கை கோர்க்கிறது.


வடிவேலு - சுந்தர்.சி கூட்டணியை மறக்க முடியாது. சுந்தர்.சி ஆரம்பத்தில் கவுண்டமணியுடன் கை கோர்த்து அசத்திக் கொண்டிருந்தார். பின்னர் வடிவேலு கூட்டணிக்கு மாறினார். அதன் பிறகு விவேக், சந்தானம் என அவரது கூட்டணிகள் மாற்றம் கண்டன. ஆனால் இந்தக் கூட்டணிகளில் பெஸ்ட்டாக கருதப்படுவது கவுண்டமணி மற்றும் வடிவேலு படங்கள்தான்.




சுந்தர் சியும், வடிவேலுவும் இணைந்து அதிரடியான காமெடிப் புயல்களை திரையுலகில் உருவாக்கி மேஜிக் செய்தவர்கள். இருவரும் இணைந்த முதல் படம் வின்னர். அதைத் தொடர்ந்து கிரி, லண்டன், நகரம் மறுபக்கம் என மிரட்டலான படங்களைக் கொடுத்தனர் இருவரும். இதில் கிரி, வின்னர் படங்களின் காமெடி பட்டையைக் கிளப்பியது. அதேபோல நகரம் படத்திலும் காமெடி களை கட்டியிருந்தது. 


இந்தப் படங்களோடு இந்தக் கூட்டணி முடிந்து போயிருந்தது. ஆனால் இந்த நான்கு படங்களின் காமெடிக் காட்சிகளும் இன்று வரை ரசிக்கப்பட்டு வருவதே இவர்களின் வலுவான கூட்டணிக்கு சாட்சியமாகும். இந்த நிலையில் மீண்டும் இவர்கள் கை கோர்க்கவுள்ளனர். வைகைப் புயல் வடிவேலுவின் பிறந்த நாளான இன்று இதுகுறித்த அறிவிப்பும், முதல் ஸ்டில்களும் வெளியாகியுள்ளன.


கேங்கர்ஸ் என்ற புதிய படத்தில் சுந்தர் சியும், வடிவேலுவும் இணைகிறார்கள். கேத்தரின் தெரசா நாயகியாக இதில் நடிக்கவுள்ளார். இவர் கடைசியாக 2019ம் ஆண்டு அருவம் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார். முழுக்க முழுக்க காமெடி கலாட்டாக்கள் நிரம்பிய படமாக கேங்கர்ஸ் உருவாகவுள்ளது.




வடிவேலு கடைசியாக நடித்த படம் மாமன்னன். படு சீரியஸான அந்த ரோலுக்குப் பிறகு வடிவேலு முழு நீள காமெடியனாக இப்படத்தில் அதிரிபுதிரி செய்யவுள்ளார். ஆனால் முகமும், கெட்டப்பும்தான் மனதில் ஒட்ட மாட்டேன் என்கிறது. வடிவேலு கெட்டப்பைப் பார்த்ததுமே நமக்கு குபீர் என சிரிப்பு வரும். ஆனால் கேங்கர்ஸ் பட ஸ்டில்களைப் பார்த்தால் சிரிப்பு வரவில்லை.. மாறாக, எப்படி ஜம்முன்னு இருந்தார். இதுல இப்படி இருக்காரே என்ற பச்சாதாபம்தான் வருகிறது. ஒரு வேளை படத்தில் காமெடியில் புகுந்து விளையாடியிருப்பாரோ என்னவோ.. எனவே படம் வரும் வரை காத்திருப்போம்.. காத்திருந்து விலா நோக சிரித்து மகிழ்வோம்.


இப்படத்தை பென்ஸ் மீடியாவும், குஷ்புவின் அவ்னி சினிமாக்ஸ் நிறுவனமும் தயாரிக்கவுள்ளன. பேய்ப் படக் கதையான அரண்மனை தொடர்களை தொடர்ந்து எடுத்து வந்த சுந்தர் சி, பேய்களுக்கு லீவு கொடுத்து விட்டு காமெடிக்கு திரும்புவது அவரது ரசிகர்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்