அதிகரிக்கும் வெப்பம்.. பல ஊர்களில் "100".. சம்மர் டிப்ஸை பாலோ பண்ணுங்க மக்களே!

Su.tha Arivalagan
Apr 18, 2023,05:04 PM IST
சென்னை: கோடைகாலம் இன்னும் ஆரம்பிக்காத நிலையில் இப்போதே வெயில் வெளுக்க ஆரம்பித்துள்ளது. இதனால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன், பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையையும் அது அனுப்பியுள்ளது. அதில் வெயில் காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய  பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவரிக்கப்பட்டு அதுகுறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.




வெயில் கடுமையாக இருப்பதால் பகல் நேரங்களில் தேவையில்லாமல் அதிக நேரம் வெளியில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பகல் நேரங்களில் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும். அதிக வெப்ப நிலை இருக்கும்போது வெளியில்அதிக நேரம் செலவிட்டால் சன் ஸ்டிரோக் ஏற்படும் வாய்ப்புண்டு. வெயில் கால வியாதிகளும் தாக்கும் அபாயம் உண்டு. எனவே வெயிலில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து வெயில்  அதிகரித்தபடி உள்ளது. பல ஊர்களில் இப்போதே 100 டிகிரி வெயில் அடிக்க ஆரம்பித்து விட்டது.  கடந்த ஆண்டு அடித்த வெயிலை விட  குறைந்தது 3 டிகிரி வெயில் அதிகமாக அடிக்கிறது. 





சென்னை, நெல்லை, திருப்பத்தூர், ராமநாதபுரம், வேலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வரும் நாட்களில்  1 முதல்  3 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம்  எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் வெயில் அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் அனல் காற்றுடன் கூடிய வெயில் அடிக்கிறது. குளுகுளு மாநிலமான கேரளாவிலேயே இந்த முறை வெயில் அதிகமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையே,  தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று முக்கிய நகரங்களில் பதிவான வெயில் அளவு:

ஈரோடு : 103 டிகிரி பாரன்ஹீட்
வேலூர்: 102
திருச்சி: 100 
சேலம்: 100
மதுரை: 99
கோயம்புத்தூர்: 99
திருநெல்வேலி: 96
சென்னை: 92 
நாகர்கோவில்: 90
ஊட்டி: 72
கொடைக்கானல்: 72