ஹேப்பி நியூஸ் ஹேப்பி நியூஸ், மே மாதத்தில் மழை பெய்ய வாய்ப்பு- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்

Manjula Devi
Apr 26, 2024,12:58 PM IST

சென்னை:  தமிழ்நாட்டில் மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் வெப்பம் சற்று தணிய வாய்ப்புள்ளதாகவும் தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டையும் தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்களில் 105 டிகிரி பாரன்ஹீட்டிற்கும் மேல் வெப்பம் வாட்டி எடுத்து வருகிறது. இது மட்டுமல்லாமல் நேற்றைய தினம் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹூட்டையும் தாண்டி  வெயில் கொளுத்தி உள்ளது. இதனால் இப்பகுதி முழுவதும் வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் கடும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். 




கடந்த இரண்டு மாதங்களாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மே மாதத்தில் வரும் அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் இருந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டு மக்களுக்கு தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் நல்ல செய்தி ஒன்றை கூறியுள்ளார். இதுகுறித்து அவர்க கூறுகையில்,  மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் ஈரோடு, சேலம், தர்மபுரி, ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில்  லேசானது முதல் மிதமானது வரை மழை  எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில் பெங்களூரிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.


இதற்கிடையே, வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருப்பதால் மக்களும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. நிறைய தண்ணீர் குடியுங்கள்.. அதிகம் வெளியில் அலையாதீர்கள். தேவை ஏற்பட்டால் மட்டுமே  வெளியே செல்லுங்கள். பழங்கள் அதிகம் சாப்பிடலாம். பருத்தி உடைகளையே அதிகம் அணியுங்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகள் போதிய அளவு தண்ணீர், மோர் போன்றவை குடிப்பதை உறுதி செய்யுங்கள். பீதி அடையத் தேவையில்லை. மாறாக,  கவனமாக இருந்து கொள்ளுங்கள். அது போதும்.