மேல பார்த்தா டபுள் வானவில்.. கீழே பார்த்தா ஒரே தண்ணீர்.. அடடா சென்னையில் சூப்பர் மழை!

Su.tha Arivalagan
May 16, 2024,08:43 AM IST

சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. தலைநகர் சென்னையில் நேற்று நள்ளிரவுக்கு மேல் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.


கோடை மழை தமிழ்நாட்டில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஆங்காங்கே பெய்து வரும் மழையால் தமிழ்நாட்டில் நிலவி வந்த கடும் வெப்பம் அடியோடு குறைந்து விட்டது. அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையமும் கூறியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




குறிப்பாக தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிலும் 18, 19, 20 ஆகிய தேதிகளில் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் மிக கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி உள்ளிட்ட தென் கோடி மாவட்டங்களில் ஏற்கனவே நல்ல மழை பெய்து வருகிறது.


இந்த சூழலில் சென்னையில் இதுவரை போக்கு காட்டி வந்த கோடை மழை நேற்று நள்ளிரவுக்கு மேல் சூப்பராக தொடங்கியுள்ளது. நள்ளிரவில் பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இன்று காலையிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழையின்போது காலையில் இரட்டை வானவில் தோன்றி சென்னை மக்களுக்கு டபுள் சர்ப்பிரைஸையும் கொடுத்தது. மழையே சர்ப்பிரைஸா இருக்கு.. இதுல இரட்டை வானவில் வேறயா என்று மக்கள் இரட்டிப்பு குஷியாகி விட்டனர். பலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் மக்கள் உற்சாகமாகியுள்ளனர்.


காலை 10 மணி வரையிலான வானிலை எச்சரிக்கை



சென்னை மட்டுமல்லாமல் அருகாமை மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாமல்லபுரத்தில் கன மழையாக கொட்டித் தீர்த்தது.  சென்னையின் புறநகர்ப் பகுதிகள், நகர்ப் பகுதிகள் என பரவலாக மிதமான மழை பெய்து வருவதால் குளிரான சூழல் உருவாகி மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.


தமிழ்நாட்டில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டனம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் தண்ணீர் தேங்கும் அளவுக்கு மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.